தெற்கு தில்லியில் நீதிமன்றத்தில் உள்ள வழக்குரைஞர்கள் அறையில் மதுபோதையில் பெண் வழக்குரைஞரை பாலியில் வன்முறை செய்தது தொடர்பாக மூத்த வழக்குரைஞரை போலீஸார் கைது செய்துள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
தில்லியில், சாக்கெட் நீதிமன்றத்தில் வழக்குரைஞராக பயிற்சி பெறும் ஒரு பெண், நேற்று முன்தினம் சனிக்கிழமை நள்ளிரவு, போலீஸாரை தொலைபேசியில் தொடர்பு கொண்டார். அப்போது, அதே நீதிமன்றத்தில் மூத்த வழக்குரைஞராக தொழில் செய்யும் 50 வயதை தாண்டிய ஒருவர், நீதிமன்றத்தில் உள்ள வழக்குரைஞர்கள் அறைக்கு மதுபோதையில் வந்தவர், தன்னை பாலியல் வன்முறை செய்ததாக புகார் தெரிவித்துள்ளார்.
பாதிக்கப்பட்ட பெண் வழக்குரைஞர் அளித்த புகாரின் பேரில், மூத்த வழக்குரைனரை போலீஸார் கைது செய்து, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்.
பாதிக்கப்பட்ட பெண் வழக்குரைஞரின் வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டு, மருத்துவ பரிசோதனையும் நடத்தப்பட்டுள்ளது. சம்பவம் நடந்த அறை சீல் வைக்கப்பட்டதுடன் அறையை தடயவியல் நிபுணர்கள் ஆய்வு செய்யப்பட்டுள்ளதாக போலீஸார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.