வரும் 2019 மக்களவைத் தேர்தலுக்கான வியூகங்களை வகுக்கவும், தேர்தலை எதிர்கொள்ளும் முறைகள் குறித்து ஆலோசனை நடத்துவதற்காக பாஜக, அடுத்த மாதம் ஆகஸ்ட் 18 மற்றும் 19-ஆம் தேதிகளில் கட்சியின் தேசிய செயற்குழு கூட்டத்தை கூட்டியுள்ளது.
பாஜகவின் கொள்கைப்படி மூன்று மாதங்களுக்கு ஒருமுறை செயற்குழுக் கூட்டம் நடத்துவது வழக்கம். ஆனால், அக்கட்சியின் தேசியத் தலைவர் அமித் ஷா, வரும் 2019 மக்களவைத் தேர்தலை முன்னிட்டு சமீபத்தில் தமிழகம் உள்பட நாடு முழுவதும் சூறாவளி சுற்றுப்பயணம் செய்து, கட்சி நிர்வாகிகளைச் சந்தித்து ஆலோசனை நடத்தி வருகிறார்.
மேலும், அந்தந்த மாநில பூத் ஏஜென்ட்டுகளையும் சந்தித்து, நாடாளுமன்றத் தேர்தல் வெற்றி குறித்தும் ஆலோசனை நடத்தி வருகிறார்.
இந்நிலையில், வரும் 2019 மக்களவைத் தேர்தலை முன்னிட்டு, தேர்தல்களில் வெற்றிபெறுவது குறித்தும் தனது சூறாவளி சுற்றுப்பயணத்தில் கிடைத்த தகவல்கள் அடிப்படையில் கட்சியின் மூத்த தலைவர்கள் மற்றும் நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்துவதற்காகவும், கட்சியின் தேசிய செயற்குழுக் கூட்டம் அடுத்த மாதம் ஆகஸ்ட் 18 மற்றும் 19-ஆம் தேதிகளில் தில்லியில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த செயற்குழுக் கூட்டத்தில் இந்த ஆண்டின் இறுதியில் நடைபெற உள்ள மத்தியப்பிரதேசம், ராஜஸ்தான், சத்தீஸ்கர் உள்ளிட்ட மாநில பேரவைத் தேர்தல் குறித்து ஆலோசனை நடத்தவே செயற்குழுக் கூட்டம் கூட்டப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
அமித் ஷா நாடு முழுவதும் சுற்றுப்பயணத்தில் இருந்ததால் மூன்று மாதங்களுக்கு ஒருமுறை நடத்தப்பட வேண்டிய செயற்குழுக் கூட்டம் நடத்தப்படவில்லை எனவும் தகவல் வெளியாகி உள்ளது.