மேட்டூர் அணையிலிருந்து காவிரி டெல்டா பாசனத்துக்காக இன்று வியாழக்கிழமை (ஜூலை 19) தண்ணீரை மலர்தூவி திறந்து வைத்தார் முதல்வர் பழனிசாமி.
மேட்டூர் அணையின் நீர்மட்டம் செவ்வாய்க்கிழமை இரவு 100 அடியை எட்டியது. இந்நிலையில், இன்று வியாழக்கிழமை காலை சுமார் 109 அடியை தாண்டிய நிலையில், காவிரி டெல்டா பாசனத்துக்காக இன்று காலை 10.30 மணியளவில் தண்ணீரை முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி மலர்தூவி திறந்து வைத்தார்.
மேட்டூர் அணையில் இருந்து டெல்டா பாசனத்திற்காக 2 ஆயிரம் கனஅடி தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது.
மேட்டூர் அணையின் வலது கரைப் பகுதியில் நடந்த தண்ணீர் திறப்பு விழா நடைபெற்றது. அணையின் வலது கரைப் பகுதியில் மேல்மட்ட மதகுகளை உயர்த்தி தண்ணீர் திறக்கப்பட்டது. பின்னர் நீர் மின் நிலையங்கள் வழியாக தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.
அணையிலிருந்து பாசனத்துக்கு தண்ணீர் திறக்கப்பட்டதால், நீர் மின் நிலையங்கள் மூலம் மின் உற்பத்தியும் துவங்கப்பட்டுள்ளது.
அணைக்கு தொடர்ந்து நீர்வரத்து அதிகரித்து வருவதால், காவிரிக் கரையோர மக்கள் எச்சரிக்கையாக இருக்கும்படி கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர். மேட்டூர் அணையிலிருந்து பாசனத்துக்கு தண்ணீர் திறக்கப்பட்டுள்ளதால், காவிரி டெல்டா மாவட்ட கரையோர மக்கள் பாதுகாப்பாக இருக்க அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் மூலம் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மேட்டூர் நீர்த் தேக்கப் பகுதியில் பொதுமக்களும், சுற்றுலாப் பயணிகளும் செல்ஃபி எடுக்க தடை செய்யப்பட்டுள்ளது. சுற்றுலாப் பயணிகளுக்கு போதுமான வசதிகள் செய்து தர நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இதுவரை எந்த முதல்வரும் மேட்டூர் அணையில் இருந்து பாசனத்துக்காக நீர் திறந்துவிட்டது இல்லை.
நிகழ்ச்சியில், 6 அமைச்சர்கள், சட்டப்பேரவை, நாடாளுமன்ற உறுப்பினர்கள், பொதுப்பணித்துறை அதிகாரிகள் மற்றும் விவசாயிகள் கலந்து கொண்டனர்.