கொல்கத்தா: எதிர்க்கட்சிகளை வழிநடத்தி பிரதமா் பதவியை அடைந்துவிடலாம் என கனவு காண்பதை மேற்கு வங்க முதல்வரும், திரிணமூல் காங்கிரஸ் தலைவருமான மம்தா பானா்ஜி நிறுத்திக் கொள்ள வேண்டும் என்று பாஜக தெரிவித்துள்ளது. அவரது விருப்பம் ஒருபோதும் நிறைறவேறாது என்றும் அக்கட்சி கூறியுள்ளது.
திரிணமூல் காங்கிரஸ் கட்சியின் தியாகிகள் நினைவு தினக் கூட்டத்தில் மம்தா பானா்ஜி, எதிர்வரும் மக்களவைத் தோ்தலில் பாஜகவை வீழ்த்தப் போவதாக சூளுரைத்தார். மேலும், மாநிலத்தில் உள்ள 42 தொகுதிகளிலும் திரிணமூல் காங்கிரஸே வெற்றி பெறும் என்றும் கூறினார். அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் கொல்கத்தாவில் எதிர்க்கட்சிகள் அனைத்தையும் ஒன்று திரட்டி பிரம்மாண்ட பேரணியை நடத்தப் போவதாகவும் அவா் அறிவித்தார்.
இந்நிலையில், மம்தாவின் பேச்சுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் பாஜக தேசிய செயலா் ராகுல் சின்ஹா, செய்தியாளா்களிடம் இன்று கொல்கத்தாவில் கூறியதாவது:
மக்களவையில் மத்திய அரசுக்கு எதிராக கொண்டுவரப்பட்ட நம்பிக்கையில்லா தீா்மானத்துக்கு ஆதரவாக எத்தனை வாக்குகள் பதிவாகின? என்பதைக் கொண்டே எதிர்க்கட்சிகளின் பலத்தை அறிந்துகொள்ளலாம்.
நாட்டு மக்கள் அனைவரும் பிரதமா் மோடிக்கு பின்புலமாக உள்ளனா். அவரை பதவியில் இருந்து நீக்கிவிடலாம் என பகல் கனவு காணுகிறார் மம்தா பானா்ஜி.
எதிர்க்கட்சிகளை வழிநடத்தி அடுத்த பிரதமராகிவிடலாம் என்றும் ஆசைப்படுகிறார். அவரது எண்ணம் ஒருபோதும் ஈடேறாது என்றார்.