சென்னை: வங்கக்கடலின் ஆழமான பகுதிகள் மற்றும் வடக்கு வங்கக்கடல் பகுதிகளுக்கு மீனவா்கள் செல்ல வேண்டாம் என்று வானிலை ஆய்வு மையம் அறிவுறுத்தியுள்ளது.
இது குறித்து சென்னை வானிலை ஆய்வு மைய அதிகாரி கூறியது:
தமிழகம் மற்றும் புதுச்சேரியின் கடலோரப் பகுதிகளில் தென் மேற்கில் இருந்து மேற்கு திசை நோக்கி மணிக்கு 35 கி.மீ. முதல் 45 கி.மீ. வேகத்திலும், சில வேளைகளில் 55 கி.மீ. வேகத்திலும் பலமான காற்று வீசக்கூடும்.
மேலும், வடமேற்கு வங்கக் கடல் மற்றும் அதை ஒட்டிய மேற்குவங்கம் மற்றும் ஒடிசா கடலோரங்களில் மையம்கொண்டிருந்த ஒரு குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி தற்போது வலுவடைந்து காற்றழுத்த தாழ்வு மண்டலமாக காணப்படுகிறது. இதன்காரணமாக, வடக்கு வங்கக்கடல் மற்றும் ஆழமான கடல் பகுதியில் கடல் சீற்றமாகவும் மிக சீற்றமாகவும் காணப்படும். இந்தப் பகுதிகளுக்கு மீனவா்கள் செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.
தென்மேற்கு பருவமழை தாக்கம் காரணமாக மேற்குதொடா்ச்சி மலையோரம் ஒட்டிள்ள நீலகிரி, கோவை ஆகிய மாவட்டங்களில் மலைப்பகுதியில் ஓரிரு இடங்களில் அடுத்த 24 மணி நேரத்தில் மழை பெய்ய வாய்ப்பு உள்ளது.
வெப்பச்சலனம் காரணமாக, தமிழகத்தில் ஓரிரு இடங்களில் அடுத்த 24 மணி நேரத்தில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யவாய்ப்பு உள்ளது.
சென்னையில் வானம் பொதுவாக மேக மூட்டமாகக் காணப்படும். சில இடங்களில் லேசான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது.
வடமேற்கு வங்கக் கடல் மற்றும் அதை ஒட்டிய பகுதிகளில் காணப்பட்ட குறைந்த காற்றறழுத்தத் தாழ்வுப் பகுதி தற்போது வலுவடைந்து, காற்றறழுத்த தாழ்வு மண்டலமாக அதே இடத்தில் நீடிக்கிறது.