கடலூா்: தமிழகத்தில் பெண்களுக்கு பாதுகாப்பற்ற சூழல் அதிகரித்து வருகிறது. இதற்கு ஆளும் ஆட்சி சரியாக இருந்திருந்தால் இது போன்ற காட்சிகளுக்கு வாய்ப்பில்லை என்று நடிகை ஸ்ரீபிரியா தெரிவித்துள்ளார்.
கடலூரில் இன்று நடைபெற்ற மாவட்ட மக்கள் நீதி மய்யம் கட்சியின் மாவட்ட நிர்வாகிகள் அறிமுகக் கூட்டத்தில் கலந்துகொண்டு நடிகை ஸ்ரீபிரியா சிறப்புரையாற்றினார்.
அப்போது, மக்களிடம் மறதி என்ற நோய் இருப்பதால் பழைய தவறுகளை மறந்து மீண்டும் மீண்டும் ஒரே கட்சிக்கு வாக்களிக்கிறார்கள் எனவே, அனைவரும் அரசியல் அறிவு பெற்றிருக்க வேண்டும். இதற்கு செய்தித்தாள், தொலைக்காட்சி பார்க்க வேண்டும். வாக்களிக்கும் முன்பு சிந்தித்து செயல்பட வேண்டும் என்றார்.
தொடா்ந்து அளித்த பேட்டியில், தமிழகத்தில் பெண்களுக்கு பாதுகாப்பற்ற சூழல் அதிகரித்து வருகிறது. இதற்கு ஆட்சியை தான் குறை சொல்ல வேண்டும். ஆட்சி சரியாக இருந்திருந்தால் இது போன்ற காட்சிகளுக்கு வாய்ப்பில்லை. சிறுமிகள் பாலியல் பலாத்காரம் போன்ற நிகழ்வுகள் தமிழகத்தில் அதிர்வு அலையை ஏற்படுத்தி வருகிறது.
ஆணும், பெண்ணும் சரிசமம் என்ற நிலையை சிறுவயது முதலே குழந்தைகளுக்கு தெரியப்படுத்தி வளா்க்க வேண்டும் என்று ஸ்ரீபிரியா கூறினார்.