18 எம்எல்ஏக்கள் தகுதி நீக்க வழக்கில் 3வது நீதிபதியாக விமலா நியமிக்கப்பட்டுள்ளார்.
முதல்வர் எடப்பாடி பழனிசாமியை மாற்றக் கோரி கடந்த ஆண்டு ஆளுநர் வித்யாசாகர் ராவிடம் வெற்றிவேல், தங்க தமிழ்ச்செல்வன் உள்ளிட்ட 18 எம்.எல்.ஏக்கள் மனு அளித்தனர். இதனைத் தொடர்ந்து கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் நம்பிக்கை வாக்கெடுப்பு உத்தரவிடக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் திமுக மனுத் தாக்கல் செய்தது.
இதையடுத்து இவர்களை தகுதி நீக்கம் செய்து சபாநாயகர் உத்தரவிட்டார். இதை எதிர்த்து 18 பேர் சார்பில் தாக்கல் செய்த மனு மீதான விசாரணை தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி, நீதிபதி எம்.சுந்தர் ஆகியோரைக் கொண்ட அமர்வில் நடந்து வந்தது. இந்த வழக்கில் அனைத்து தரப்பு வாதங்கள் முடிவடைந்த நிலையில் எழுத்துபூர்வமான இறுதி வாதங்கள் தாக்கல் செய்யப்பட்டன. அதையடுத்து கடந்த ஜனவரி 23-ம் தேதி இந்த வழக்கின் தீர்ப்பை நீதிபதிகள் தேதி குறிப்பிடாமல் தள்ளிவைத்து உத்தரவிட்டனர். இந்த வழக்கின் தீர்ப்பில்
தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி, நீதிபதி சுந்தர் ஆகியோர் மாறுபட்ட கருத்தை தெரிவித்தனர். இதையடுத்து 3-வது நீதிபதியாக விமலா நியமிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.