லாரி உரிமையாளர்கள் சங்கத்தினர் டீசல் கட்டணம், சுங்க கட்டணம் உயர்வை கண்டித்து இன்று முதல் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளதால் காய்கறிகள் விலை உயரும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
டீசல் கட்டணம், சுங்க கட்டணம் ஆகியவற்றின் விலை உயர்வுகளை கண்டித்து நாடு முழுவதும் காலவரையற்ற வேலை நிறுத்தப்போராட்டத்தை லாரி உரிமையாளர்கள் சங்கத்தினர் இன்று முதல் தொடங்கியுள்ளனர்.
பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டம் நடத்தப்போவதாக லாரி உரிமையாளர்கள் சங்கத்தினர் அறிவித்திருந்தனர். இதுதொடர்பாக மத்திய அரசு இதுவரை பேச்சுவார்த்தைக்கு அழைக்காததால், திட்டமிட்டபடி வேலைநிறுத்தப் போராட்டம் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டது. அதன்படி, இன்று முதல் காலவரையற்ற வேலை நிறுத்தப்போராட்டத்தை லாரி உரிமையாளர்கள் சங்கத்தினர் தொடங்கியுள்ளனர்.
இதன் காரணமாக நாடு முழுவதும் 75 லட்சம் லாரிகள் இன்று முதல் ஓடாது என தமிழ்நாடு லாரி உரிமையாளர்கள் சங்கத்தினர் அறிவித்துள்ளனர். அதுமட்டுமல்லாமல், தமிழகத்தில் மட்டும் சுமார் 5 லட்சம் லாரிகள் இயங்காது என தெரிவித்துள்ளனர். இதனால் காய்கறி உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள் விலை உயரும் எனவும், சுமார் 60 ஆயிரம் கோடி ரூபாய் இழப்பு ஏற்படும் எனவும் கூறப்படுகிறது.
நேற்றைய விலையை விட இன்று காய்கறிகள் விலை சற்று உயர்ந்து உள்ளது. 20-ஆம் தேதி முதல் காய்கறிகள் விலை கடுமையாக உயர வாய்ப்பு உள்ளது என்றும் கூறப்படுகிறது.
இன்று தொடங்கி உள்ள லாரிகள் வேலை நிறுத்த போராட்டத்தில் முக்கிய சங்கங்கள் பங்கேற்கவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து லாரி உரிமையாளர்கள் மாநில சம்மேளனத்தின் தமிழ்நாடு தலைவர் குமாரசாமி கூறுகையில், சுமார் 4.5 லட்சம் உறுப்பினர்களை கொண்ட எங்கள் சங்கம் இந்த போராட்டத்தில் கலந்து கொள்ளவில்லை.
ஜூலை மாதம் 20-ஆம் தேதி வேலை நிறுத்தம் அறிவித்துள்ளோம். அதற்குள் நல்ல முடிவை மத்திய அரசு அறிவிக்கவில்லை என்றால் நாடு முழுவதும் லாரிகள் ஸ்டிரைக் நடைபெறும் என்றார்.