ஸ்ரீநகர்: காஷ்மீர் பள்ளத்தாக்கு பகுதியில் நேற்று பயங்கரவாதிகளுக்கும் பாதுகாப்பு படையினருக்கும் இடையே நடந்த துப்பாக்கிச் சண்டையால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக துண்டிக்கப்பட்டு இருந்த இணைய சேவை மீண்டும் இன்று தொடங்கப்பட்டது.
ஜம்மு காஷ்மீர் மாநிலம் அனந்தநாக் மாவட்டத்தில் பாதுகாப்பு படையினருக்கும், பயங்கரவாதிகளுக்கும் இடையே நேற்று நடைபெற்ற துப்பாக்கிச் சண்டையில் 4 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர். காஷ்மீர் மாநில காவலரும், பொதுமக்களில் ஒருவரும் மரணமடைந்தனர். பொதுமக்கள் பலர் காயமடைந்துள்ளனர். இந்நிலையில் காஷ்மீரில் சட்டம் ஒழுங்கை பராமரிக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக காஷ்மீர் பள்ளத்தாக்கு பகுதிகளில் உள்ள ஸ்ரீநகர், அனந்தநாக் மற்றும் புல்வாமா ஆகிய 3 மாவட்டங்களில் நேற்று இணையதள சேவைகள் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டு இருந்தனர்.
இதையடுத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக துண்டிக்கப்பட்டு இருந்த இணைய சேவை மீண்டும் இன்று தொடங்கியுள்ளது என போலீஸ் அதிகாரிகள் தெரிவித்தனர்.