சில வருடங்களுக்கு முன் விண்வெளி ஆராய்ச்சிக்காக கட்டப்பட்ட சீனாவிற்கு சொந்தமான டியாங்கோங்-1 என்ற விண்வெளி ஆராய்ச்சி நிலையம் தற்போது பூமியின் மீது விழும் நிலையில் இருப்பதாக கூறப்படுகிறது.
ரஷ்யா மற்றும் அமெரிக்காவிற்கு போட்டியாக 2011-ஆம் ஆண்டு மிகப்பெரிய விண்வெளி ஆராய்ச்சி நிலையத்தினை சீனா விண்வெளியில் வெற்றிகரமாக கட்டி முடித்தது. சுமார் 8.5 டன் எடைகொண்ட விண்வெளி ஆராய்ச்சி நிலையம் 2016-ஆம் ஆண்டுடன் தனது கட்டுப்பாட்டை முற்றாக இழந்துவிட்டது. இந்த நிலையில் டியாங்கோங் - 1 பூமியுடன் மோதி அழிவுக்குள்ளாகும் என அறிவிப்பு வெளியாகியுள்ளது.
அடுத்த மாதத்தில் அது எப்படியும் பூமியை வந்தடையும் என்று கூறுகின்றார். இது பூமியை நெருங்கும் போது பல பாகங்கள் எரிந்து அழிந்து போய் இருக்கும். ஆனாலும் சில பாகங்கள் பூமியில் மிகவும் மோசமாக தாக்கப்பட வாய்ப்பு இருப்பதாக சீனாவின் விண்வெளி ஆராய்ச்சி துறை கூறுகிறது.
மேலும் மணிக்கு சுமார் 27,000 கிலோ மீட்டர் அதிக வேகத்தில் பூமியை நோக்கி வந்து கொண்டிருக்கும் டியாங்கோங் – 1, பூமியின் வளிமண்டலத்திற்குள் நுழையும் போது எரியத் தொடங்கிவிடும். எனினும் முற்றாக எரியாத நிலையில் பெரும்பாலான பகுதிகள் பூமியில் மோதக் கூடிய வாய்ப்பு உள்ளதாக சீன விண்வெளித்துறை தெரிவித்துள்ளது.
டியாங்கோங் – 1 பூமியுடன் மோதப்போகும் இடம் எது அதனால் ஏற்படும் பாதிப்பு என்ன என்பது குறித்த தகவல்கள் எதுவும் வெளியாகவில்லை.