நோயாளியின் துண்டிக்கப்பட்ட காலையே தலையணையாக்கிய மருத்துவ ஊழியர்களின் கொடூர செயல்!

ஜான்சி மருத்துமனையில் நோயாளியின் துண்டிக்கப்பட்ட காலையே தலையணையாக்கிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. 
நோயாளியின் துண்டிக்கப்பட்ட காலையே தலையணையாக்கிய மருத்துவ ஊழியர்களின் கொடூர செயல்!

ஜான்சி: ஜான்சி மருத்துமனையில் நோயாளியின் துண்டிக்கப்பட்ட காலையே தலையணையாக்கிய மருத்துவமனை ஊழியர்களின் மனிதாபிமானமற்ற செயல் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. 

மருத்துவமனைகளில் இறந்தவர்களின் சடலத்தை கொண்டு செல்ல ஆம்புலன்ஸ் மறுப்பது, ஆதார் அட்டை இல்லை என்று கர்ப்பிணிக்கு சிகிச்சை மறுப்பு,  மருத்துவமனை ஊழியர்களுக்கு லஞ்சம் வழங்க மறுத்தால் அலட்சியமான கவனிப்பு போன்ற அவல காட்சிகள் நாள்தோறும் நடந்துவரும் சம்பவங்களைத் தொடர்ந்து இப்போது ஜான்சி மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் நோயாளிக்கு தலையாணைக்கு பதில் அறுவை சிகிச்சை செய்து அகற்றப்பட்ட காலையே தலையாணையாக வைத்துள்ள அவலம் நிகழ்ந்துள்ளது. 

ஜான்சியின் மவுரின்பூர் பகுதியில் நேற்று சனிக்கிழமை தனியார் பள்ளி பேருந்து டிராக்டர் மோதாமல் இருப்பதற்காக பேருந்தை திருப்புகையில் சாலையில் வந்துகொண்டிருந்த ஒருவரர் மீது மோதியது. இதில் பலத்த காயமடைந்தவர் அங்குள்ள மகாராணி லக்ஷ்மி பாய் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். விபத்தில் பாதிக்கப்பட்டவரின் இடதுகால் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளது. நோய்த்தாக்குதலை தடுப்பதற்காக உடனடியாக அவசரசிகிச்சை பிரிவில் சேர்க்கப்பட்டு அறுவை சிகிச்சை செய்து அவருடைய இடதுகாலை மருத்துவர்கள் அகற்றினர். 

சிகிச்சைக்கு பின்னர் மற்றொரு பிரிவில் அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது. அப்போது காயமடைந்த நபரின் தலையின் கீழ் தலையணை வைக்காமல் அறுவை சிகிச்சை செய்து அகற்றப்பட்ட அவருடைய துண்டிக்கப்பட்ட காலையே தலையணையாக வைத்துள்ளனர். 

ஒரு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையிலேயே நடந்து அவலக் காட்சியை உள்ளூர் தொலைக்காட்சி ஒன்றில் ஒளிபரப்பப்பட்டுள்ளது. இந்த அவலக் காட்சி பொதுமக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தி உள்ளது. 

இச்செய்தி வெளியுலகிற்கு தெரியவந்ததும் மகாராணி லக்ஷ்மி பாய் மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனையின் முதல்வர் சாத்னா கவுசிக், குற்றவாளிகளுக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்தார்.

மேலும், “பாதிக்கப்பட்ட நபருக்கு உடனடியாக முதலுதவி அளிக்கப்பட்டது. நோயாளின் தலைப்பகுதியை உயர்த்துவதற்கு மருத்துவர்கள் ஏதாவது கிடைக்குமா என பார்த்துள்ளனர். பின்னர் நோயாளியின் காலையே அதற்கு பயன்படுத்தப்பட்டுள்ளது. 

இதுதொடர்பாக விசாரணை நடத்துவதற்கு குழு ஒன்று அமைக்கப்பட்டுள்ளது. இதில் எங்களுடைய பணியாளர்கள் தவறு செய்திருந்தார்கள் என்றால் கடுமையான நடவடிக்கையை எடுக்கப்படும் என தெரிவித்துள்ளார். 

இந்நிலையில், இந்த விவகாரத்தில் நடத்தப்பட்ட முதல்கட்ட விசாரணையின் படி, மருத்துவமனையின் இரு மருத்துவர்கள் மற்றும் பணியாளர்கள் பணியிடைநீக்கம் செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. 

இவ்விவகாரம் தொடர்பான முழுமையான விவரமும் கிடைக்கப்பெற்றதும் கடுமையான நடவடிக்கையை எடுக்கும் என மாநில துணை முதல்வர் தினேஷ் சர்மா கூறியுள்ளார். 
 
அறுவை சிகிச்சை அறையில் அகற்றப்பட்ட கால், அடுத்த வார்டு அறைக்கு அவர் மாற்றப்பட்ட பிறகு எப்படி வந்தது என்ற கேள்விக்கு கல்லூரி முதல்வர் தெளிவான பதில் அளிப்பாரா என்பதுதான் அனைவரின்  கேள்வியாக உள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com