தெஹ்ரான்: ஐக்கிய அரபு எமிரேட்சில் இருந்து துருக்கி சென்ற விமானம் ஈரான் மலைப்பகுதியில் கீழே விழுந்து நொறுங்கியது. இதில் விமானத்தில் பயணம் செய்த 11 பேரும் உயிரிழந்தனர்.
துருக்கி நாட்டை சேர்ந்த தனியார் விமானம் ஐக்கிய அரபு எமிரேட்சில் இருந்து நேற்று ஞாயிற்றுக்கிழமை 11 பேருடன் இஸ்தான்புல் நோக்கி புறப்பட்டது. விமானம் 35 ஆயிரம் அடி உயத்திற்கு மேல் சென்றுகொண்டிருந்தது. ஒரு மணி நேரத்திற்கு பின்னர் வேகமாக சில நிமடங்களுக்குள் திடீரென கீழே விழுந்து நொறுங்கியது.
ஈரான் மலைப்பகுதியில் கீழே விழுந்து விமானம் தீப்பிடித்து எரிவதை கண்ட அப்பகுதி கிராம மக்கள் உடனடியாக உள்ளூர் போலீஸாருக்கு தகவல் கொடுத்தனர். அவர்கள் மீட்புப் படையினருடன் அங்கு விரைந்து சென்று சிதறி கிடந்த 11 பேரின் உடல்களை மீட்டனர் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இறந்தவர்களை அடையாளம் காண டி.என்.ஏ. சோதனைகள் தேவைப்படும் என தெரிவித்தனர்.
ஈரான் மலைப்பகுதியில் பலத்த காற்று மற்றும் மழை பெய்து வருவதால் இந்த விபத்து நடந்திருக்கலாம் என கூறப்படுகிறது.