உள்நாட்டு விமான சேவை ஒழுங்குமுறை இயக்குநரகம் உத்தரவையடுத்து 47 இண்டிகோ விமானங்கள் இன்று ரத்து செய்யப்பட்டுள்ளன.
குறைந்த கட்டண விமான சேவை அளித்து வரும் விமான நிறுவனங்களில் முன்னணியில் உள்ளது இண்டிகோ. இண்டிகோ விமான நிறுவனத்திற்கு சொந்தமான விமானம் ஒன்று நேற்று குஜராத்தின் அகமதாபாத்தில் இருந்து, உத்தரபிரதேசத்தின் லக்னோ நகருக்கு பயணித்தது. ஆனால் புறப்பட்ட 40 நிமிடங்களில் அந்த விமானத்தில் இன்ஜின் கோளாறு இருப்பது கண்டறியப்பட்டது.
இதையடுத்து அவசரமாக அந்த விமானம் அகமதாபாத் திரும்பியது. பாதுகாப்பு உத்தரவு இந்த சம்பவத்தை குறிப்பிட்டு, 'A320 நியோ' ரக 11 விமானங்களுக்கு, விமானப் போக்குவரத்துத்துறை இயக்குநரகம் இன்று தடை விதித்துள்ளது. பயணிகள் பாதுகாப்பை உறுதி செய்யும்விதமாக, உள்நாட்டு விமான சேவை ஒழுங்குமுறை இயக்குநரகம் ஒரு உத்தரவை பிறப்பித்துள்ளது.
இதையடுத்து தில்லி, மும்பை, கொல்கத்தா, ஹைதராபாத், பெங்களூரு, பாட்னா, ஸ்ரீநகர், புவனேஷ்வர், அமிர்தசரஸ், கௌஹாத்தி உட்பட உள்நாட்டில் இயங்கும் 47 விமானங்கள் ரத்துசெய்யப்பட்டுள்ளதாக, இண்டிகோ நிறுவனம் அதன் அதிகாரபூர்வ இணையதளத்தில் பதிவிட்டுள்ளது.