மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் நிர்மலா சீத்தாராமன் அடுத்த மாதம் சீனா செல்ல உள்ளார். அவர் தனது பயணத்தின் போது இந்தியா-சீனா இடையே டோக்லாம் எல்லையில் கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் நிகழ்ந்த 73 நாள் பிரச்னை குறித்தும், இரு நாட்டு நல்லுறவு குறித்தும் அந்நாட்டு தலைவர்களுடன் ஆலோசிப்பார் என தெரிகிறது. எனினும் இதுகுறித்து அவர் விரிவான தகவல் ஏதையும் குறிப்பிடவில்லை.
கடந்த டிசம்பரில், ரஷ்ய, இந்தியா மற்றும் சீனா ஆகிய நாடுகளின் RIC குழுமத்தின் வெளியுறவு அமைச்சர்கள் கூட்டத்தில் கலந்துகொள்ள சீன வெளியுறவுத்துறை அமைச்சர் வாங் இங்கு வந்திருந்தார். அப்போது நம் நாட்டின் வெளியுறவு துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் சீன வெளியுறவு அமைச்சர் Wang Yi உடன் இருதரப்பு பிரச்சினைகள் குறித்து முக்கிய பேச்சுவார்த்தை நடத்தினார். கடந்த மாதம் வெளியுறவுத் துறை செயலாளர் விஜய் கோகலே பெய்ஜிங் சென்றார்.
மேலும் வரும் ஜூன் மாதம் எஸ்.சி.ஓ. எனப்படும் ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு உச்சி மாநாடு சீனாவில் நடக்கிறது. இதில் பிரதமர் மோடி பங்கேற்கிறார். எனவே இதுவும் சீத்தாராமனின் சீன பயணத்தின் முக்கியத்துவம் வாய்ந்ததாக இருக்கும் என தகவல் அறிந்த வட்டாரங்கள் கூறுகின்றன.