சென்னை: தினகரன் மட்டுமல்ல யார் வேண்டு மானாலும் கட்சி ஆரம்பிக்கலாம். வழிப்போக்கர்கள் கட்சி தொடங்குவது குறித்து கவலையில்லை என்று மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.
அமைச்சர் டி.ஜெயக்குமார் இன்று அவரது இல்லத்தில் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
கடலுக்குச் சென்ற மீனவர்கள் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி நிலவி வருவதால் மீனவர்கள் அந்த பகுதிகளில் இருக்கக் கூடிய தீவுகளில் சென்று தங்கி கொள்ள அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
தகவல் தெரியாமல் கடலுக்கு சென்றுள்ள மீனவர்களை காக்க அவர்களை ரேடியோ, மற்றும் விமானங்கள் மூலம் எச்சரிப்பது உள்ளிட்ட அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
மீனவர் அமைப்புகள், கடற்படை, கடலோரக் காவல் படை உள்ளிட்டோர் மூலம் மீனவர்களுக்கு தகவல் கொடுக்கப்பட்டுள்ளது என தெரிவித்தார்.
சுற்றுலாவை மேம்படுத்தும் மலையேற்ற பயிற்சிக்கு தடைவிதிக்க முடியாது. மலையேற்ற பயிற்சி ஒரு வீர சாகச விளையாட்டு. அதனை தடை செய்ய முடியாது. அதே நேரம் சுற்றுலா மேம்படுவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறினார்.
மேலும் அவர் கூறிகையில், குற்றப்பின்னணி கொண்டவர்கள் யாரும் அதிமுகவில் இல்லை. குற்றபின்னணி கொண்டவர்கள் வேட்பாளராக நிறுத்தப்படுவதாக கூறப்படும் கருத்தை மற்ற கட்சிகள் ஆராய்ந்து செயல்பட வேண்டும் என்றார்.
தினகரன் மட்டுமல்ல யார் வேண்டு மானாலும் கட்சி ஆரம்பிக்கலாம். ஆனால் அதிமுகவின் கொடியையும், சின்னத்தையும் யாரும் சொந்தம் கொண்டாட முடியாது. வழிப்போக்கர்கள் கட்சி தொடங்குவது குறித்து கவலையில்லை என ஜெயக்குமார் பதில் அளித்தார்.