திருநெல்வேலி: குற்றாலம் அருவிகளில் பெய்து வரும் கனமழை காரணமாக குற்றாலம் அறிவிகளில் குளிக்கத் தடை விதிக்கப்பட்டுள்ளது.
கடந்த சில தினங்களாக கோடைவெயில் சுட்டெரித்த நிலையில், செவ்வாய்க்கிழமை அதிகாலை முதல் வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது. அதோடு, மிதமான சாரல் மழையும் பெய்தது. குற்றாலம் மலைப்பகுதியில் பெய்த கனமழையின் காரணமாக குற்றாலம் பேரருவி மற்றும் ஐந்தருவியில் பிற்பகல் முதல் தண்ணீர் விழத்தொடங்கியது.
குற்றாலம் பேரருவியில் பரவலாகவும், ஐந்தருவியில் ஐந்து கிளைகளிலும் தண்ணீர் கொட்டியது. மழையின் காரணமாக கோடைவெயிலின் தாக்கம் குறைந்து குளிர்ந்த காற்று வீசியது.
இந்நிலையில், குற்றாலம் பகுதியில் நேற்று முதல் பெய்த மிதமான மழை பின்னர் கனமழையாக பெய்து வருவதால் குற்றாலம் பேரருவி மற்றும் ஐந்தருவியில் அதிகமான தண்ணீர் விழத்தொடங்கியது.
இதையடுத்து மக்களின் பாதுகாப்பு நலன் கருதி குற்றலாம் அருவிகளில் குளிக்க தடைவிதிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில், திருநெல்வேலி மாவட்டம், பாபநாசத்தில் 40 மி.மீ. மழை பதிவாகியுள்ளது. ராமநாதபுரம் மாவட்டம் தொண்டியில் 20 மி.மீ., பாம்பன், கமுதி, திருநெல்வேலி மாவட்டம் மணிமுத்தாறு, அம்பாசமுத்திரம், சிவகங்கை மாவட்டம் மானாமதுரை, தூத்துக்குடி, கோவில்பட்டி, விருதுநகர், சிவகாசி ஆகிய இடங்களில் தலா 14 மி.மீ. மழை பதிவாகியுள்ளது. இதேபோன்று திண்டுக்கல்லில் 14 மி.மீட்டரும், நிலக்கோட்டையில் 15 மி.மீட்டரும், தேனி , திருப்பூரில் 13 மி.மீட்டர் மழை பதிவாகியுள்ளது.