விருதுநகர்: தொடர் மழை காரணமாக ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே உள்ள சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோயிலுக்கு செல்ல பக்தர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.
இந்தியக் கடல் பகுதியில் இலங்கை, குமரிக்கடல் மற்றும் மாலத் தீவுகளை ஒட்டியுள்ள பகுதிகளில் திங்கள்கிழமை நிலவி வந்த குறைந்த காற்றழுத்தத் தாழ்வு பகுதி தற்போது வலுவடைந்து காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறியுள்ளது. இது நேற்று செவ்வாய்க்கிழமை காலை மாலத் தீவுக்கு கிழக்கே 290 கி.மீ. தொலைவில் நிலைகொண்டிருந்தது.
இது மேலும் வலுவடைந்து, வடமேற்கு திசையில் லட்சத்தீவுகளை நோக்கி நகரக்கூடும். இதன் காரணமாக தென் தமிழகத்தில் பெரும்பாலான இடங்களில் அடுத்த இரண்டு நாள்களுக்கு (மார்ச் 14, 15) மழை பெய்யும்.
அதேபோல், வடதமிழகத்தில் ஒரு சில இடங்களில் அடுத்த இரண்டு நாள்களுக்கு மழை பெய்யும். தென்தமிழக பகுதிகளில் ஓரிரு இடங்களில் செவ்வாய் மற்றும் புதன்கிழமை கனமழை பெய்யக்கூடும். சென்னையில் பொதுவாக மேகமூட்டமாகக் காணப்படும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது.
இதன்காரணமாக தமிழகத்தின் தென் மாவட்டங்களான திருநெல்வேலி, தூத்துக்குடியில் சில இடங்களில் லேசான மழை பெய்ய தொடங்கியது. பின்னர் தொடர் மழையாக பெய்து வருகிறது.
இந்நிலையில், நேற்று முதல் தொடர்ந்து மழை பெய்து வருவதால் பாதுகாப்பு நலன் கருதி சதுரகிரி கோயிலுக்கு பக்தர்கள் செல்ல வேண்டாம் என வனத்துறை அனுமதி மறுத்துள்ளது. இதனால் பிரதோஷ வழிபாடு நடத்த வந்த பக்தர்கள் மலையடிவாரத்தில் காத்திருக்கின்றனர்.