சென்னை: தமிழகத்தின் வட மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரியில் இரவு முதல் மழை பெய்து வருகிறது. கன மற்றும் மிதமான மழை பெய்து வருவதால் விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
வட தமிழகத்தில் அநேக இடங்களில் அடுத்த 24 மணி நேரத்தில் லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது.
அதன்படி நள்ளிரவு முதல் சென்னை உள்பட பல்வேறு மாவட்டங்களில் மிதமான மழை பெய்து வருகிறது. சென்னை, விழுப்புரம், கடலூர், திருவண்ணாமலை, திருவள்ளூர், திருச்சி., சேலம், கிருஷ்ணகிரி, திண்டுக்கல் உள்ளிட்ட மாவட்டங்களிலும், புதுச்சேரியின் முதலியார்பேட்டை, அரியாங்குப்பம், விராம்பட்டிணம் போன்ற பகுதிகளிலும் மிதமான மழை பெய்து வருகிறது.
காஞ்சிபுரம், விழுப்புரம், திருக்கோவிலூர், சேலம் உள்ளிட்ட பகுதிகளில் பரவலாக நல்ல மழை பெய்துள்ளது. ஒசூர் மற்றும் அதன் சுற்றுப்புற பகுதிகளில் காற்றுடன் கூடிய மழை பெய்து வருகிறது. அதுபோன்று திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி மற்றும் அதன் சுற்றுப்புற பகுதிகளில் பெய்து கனமழை காரணமாக போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர், எரியோடு, கோவிலூர் குஜிலியம்பாறை ஆகிய பகுதிகளிலும் நல்ல மழை பெய்துள்ளது.
தமிழகத்தின் தென் மற்றும் வட மாவட்டங்களில் பரவலாக மழை பெய்து வருவதால் விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
தமிழகத்தில் வெள்ளிக்கிழமை காலை 8.30 வரையிலான கடந்த 24 மணிநேரத்தில், விருதுநகர் மாவட்டம், கோவிலாங்குளத்தில் 40 மி.மீ. மழைப் பதிவாகியுள்ளது. திருவாரூர் மாவட்டம், நன்னிலத்தில் 30 மி.மீ. மழைப் பதிவாகியுள்ளது.