சென்னை சர்வதேச விமான நிலையத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த இரண்டு பேரை போலீஸார் கைது செய்துள்ளனர்.
சென்னை பள்ளிக்கரணை காவல் நிலையத்திற்கு நேற்று இரவு வந்த தொலைபேசி அழைப்பில் பேசிய மர்ம நபர் ஒருவர், சென்ன சர்வதேச விமானநிலையத்தில் வெடிகுண்டு வைக்கப்பட்டுள்ளதாக மிரட்டல் விடுத்தார்.
இதையடுத்து விமானநிலையம் முழுவதும் வெடிகுண்டுகளை செயலிழக்க வைக்கும் கருவிகளுடன் வெடுகுண்டு நிபுணர்கள் தீவிர சோதனையில் ஈடுபட்டனர். பயணிகள் மற்றும் அவர்களது உடைமைகளை மோப்ப நாய்களின் உதவியுடன் தீவிரமாக பரிசோதித்த பின்னரே உள்ளே செல்ல அனுமதிக்கப்படுகின்றனர். இறுதியில் வெடிகுண்டு மிரட்டல் புரளி என்பது தெரியவந்தது. போலீசாருக்கு தகவல் அளித்த மர்ம நபர் யார் என்பது குறித்து போலீஸார் விசாரணை நடத்தி வந்தனர்.
இதனிடையே காவல் நிலையத்திற்கு வந்த தொலைபேசி அழைப்பை ஆராய்ந்ததில் மடிப்பாக்கம் பகுதியில் இருந்து பேசியது கண்டுபிடிக்கப்பட்டது.
இதனைத் தொடர்ந்து போலீஸார் நடத்திய விசாரணையில் காஞ்சிபுரம் மாவட்டம் பள்ளிக்கரணை பகுதியைச் சேர்ந்த சக்தி சரவணன் மற்றும் அவரது நண்பர் தீபானந்த் ஆகியோரை கைது செய்து விசாரித்து வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.