தஞ்சாவூர்: உடல் நலக்குறைவால் உயிரிழந்த ம.நடராஜனின் உடல், இறுதி சடங்கிற்காக அவரது சொந்த ஊரான தஞ்சாவூருக்கு எடுத்துச் செல்லப்பட்டது.
புதிய பார்வை ஆசிரியரும் சசிகலாவின் கணவருமான ம.நடராஜன் கல்லீரல் மற்றும் சிறுநீரக செயலிழப்பால் பாதிக்கப்பட்டிருந்தார். இதனால், கடந்த 2017ஆம் ஆண்டு அக்டோபரில் கல்லீரல் மற்றும் சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை செய்துகொண்டார்.
இந்நிலையில், கடந்த மார்ச் 16ஆம் தேதி அவருக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டதால் சென்னை குளோபல் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இதனையடுத்து, நேற்று நள்ளிரவு ம.நடராஜன் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தார். அவரது உடல் சென்னை பெசன்ட் நகரில் உள்ள அவரது வீட்டில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டிருந்தது.
அஞ்சலிக்குப் பிறகு அவரது உடல் அவரது சொந்த ஊரான தஞ்சை மாவட்டம் விளார் கிராமத்திற்கு எடுத்து வரப்பட்டது. அருளானந்தம் இல்லத்தில் வைக்கப்பட்டுள்ள அவரது உடலுக்கு உறவினர்கள் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். அவரது இறுதிச்சடங்குகள் நாளை நடத்தப்பட்டு மாலை உடல் தகனம் செய்யப்படலாம் என தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதற்கிடையே நடராஜன் இறுதிச்சடங்கில் பங்கேற்பதற்காக சிறையில் இருக்கும் சசிகலாவுக்கு பல்வேறு நிபந்தனைகளுடன் 15 நாட்கள் பரோல் வழங்கப்பட்டுள்ளது. இன்று பிற்பகல் சிறையில் இருந்து புறப்பட்ட சசிகலா சாலை மார்க்கமாக தஞ்சை சென்று அங்கிருந்து விளார் கிராமம் வந்தடைந்தார். டி.டி.வி தினகரன், புகழேந்தி ஆகியோரும் தஞ்சாவூர் வந்தடைந்துள்ளனர்.