ஐந்தாயிரம் போலியான அரசு சாரா தொண்டு நிறுவனங்களின் உரிமம் ரத்து
புதுதில்லி: நாட்டில் 5 ஆயிரம் போலியான அரசு சாரா தொண்டு நிறுவனங்களின் உரிமம் ரத்து செய்யப்பட்டுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.
மக்களவையில் இது தொடர்பான கேள்வி ஒன்றிற்கு மத்திய உள்துறை இணையமைச்சர் கிரண் ரிஜிஜு எழுத்துப் பூர்வமாக பதில் அளித்தார்.
அதில், வருமான வரி கணக்கை தாக்கல் செய்யாத காரணத்தால் கடந்த ஆண்டு ஏப்ரல் 1-ஆம் தேதி நாடு முழுவதும் உள்ள 5 ஆயிரம் போலியான அரசு சாரா தொண்டு நிறுவனங்களின் உரிமங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. இதன் மூலம் அவை, வெளிநாடுகளிலிருந்து நன்கொடை பெறவது தடை செய்யப்பட்டுள்ளது என்று தெரிவித்துள்ளார்.
அயல்நாட்டு பங்களிப்பு ஒழுங்குமுறைச் சட்டத்தின் (FCRA) கீழ் உள்ள அரசு சாரா நிறுவனங்களின் பதிவு சட்டங்களை மீறுவதாகக் கண்டறியப்பட்ட பின்னர் ரத்து செய்யப்பட்டுள்ளது என்று தெரிவித்துள்ளார்.
மேலும், கடந்த 2010-11-ஆம் நிதி ஆண்டில் எந்த அபராதமும் இல்லாமல் வருமான வரி கணக்கு தாக்கல் செய்ய வாய்ப்பு அளிக்கப்பட்டது. ஆனால், அதற்கும் தவறியதால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டது என்றும் அமைச்சரின் பதிலில் கூறப்பட்டுள்ளது.
கடந்த ஐந்து நிதியாண்டில், அந்நியச் செலாவணி முகாமைச் சட்டத்தின் (FEMA) 1999-ன் கீழ் 2,745 நிறுவனங்களுக்கு எதிராக வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இதில் 537 வழக்குகள் மூடித்து வைக்கப்பட்டுள்ளன. 183 வழக்குகளுக்கு நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளன. மேலும், 289 நிறுவனங்களுக்கு எதிராக பணமோசடி தடுப்பு சட்ட விதிகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளதாக எழுத்துப்பூர்வமான பதிலில் தெரிவித்துள்ளார். .