கோவை: கோவையில் பாஜக மாவட்ட தலைவர் மற்றும் இந்து முன்னணி பிரமுகர் வீட்டில் பெட்ரோல் குண்டு வீசப்பட்டதற்கு தமிழக பாஜக தலைவர் தமிழிசை கண்டனம் தெரிவித்துள்ளார்.
கோவை சிங்காநல்லூரில் வசிக்கும் பாஜக மாவட்ட தலைவர் நந்தகுமார் வீட்டில் இன்று அதிகாலை சில மர்ம நபர்கள் பெட்ரோல் குண்டு வீசி சென்றுள்ளனர். இதில், அவரின் வீட்டின் முன் நிறுத்தப்பட்டிருந்த இனோவா கார் சேதமடைந்தது. இதுகுறித்து பீளமேடு போலீஸா வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதேபோன்று கோவை - செல்வபுரத்தில் வசிக்கும் இந்து முன்னணி பிரமுகர் உமாபதி என்பவர் வீட்டிலும் சில மர்மர் நபர்கள் பெட்ரோல் குண்டு வீசி சென்றுள்ளனர். அதிகாலை நேரத்தில் கோவையில் அடுத்தடுத்து நடந்த பெட்ரோல் குண்டு சம்பவங்களால் பதற்றம் நிலவி வருகிறது.
இந்த சம்பவத்திற்கு தமிழக பாஜக தலைவர் தமிழிசை டுவிட்டரில் கண்டனம் தெரிவித்துள்ளார். அதில், கோழைத்தனமான தாக்குதல் நடத்தியவர்களை காவலர் துறை விரைந்து கைது செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி உள்ளார்.