ஹைதராபாத்: தெலங்கானாவில் அறிமுகமாகியுள்ள புதிய போக்குவரத்து விதிகளின்படி பொது இடங்களில் 30 நிமிடங்கள் வரை வாகனங்களை பார்க்கிங் கட்டணமின்றி நிறுத்தலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
தெலங்கானா மாநில போக்குவரத்து விதிமுறைகளின்படி பொது இடங்களில் வாகனங்களை நிறுத்துவதற்கு கட்டணம் வசூலிக்கப்படுகிறது. இதில் மாற்றங்கள் செய்து புதிய அறிவிப்பை நேற்று செவ்வாய்க்கிழமை நகராட்சி நிர்வாகம் மற்றும் நகர்ப்புற வளர்ச்சி துறை சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து நகராட்சி நிர்வாகம் மற்றும் நகர்ப்புற வளர்ச்சி துறை செயலாளர் அரவிந்த் குமார் கூறியதாவது:
இந்த புதிய அறிவிப்பின் படி 30 நிமிடங்கள் வரை பார்க்கிங் செய்வதற்கு எந்தவொரு நபரிடமும் கட்டணம் வசூலிக்கப்பட மாட்டாது என்று அறிவித்துள்ளது. இதுவே, கடைகளில் பொருட்கள் வாங்கிய பில்லைக் காட்டினால் ஒரு மணி நேரம் வரை பார்க்கிங் கட்டணம் கிடையாது. ஆனால், பில் தொகை பார்க்கிங் கட்டணத்தை விட அதிகமாக இருக்க வேண்டும்.
இந்த புதிய விதிமுறையால் பொது இடங்களில் போதிய அளவு பார்க்கிங் வசதியைத் தொடர்ந்து உருவாக்க முடியும் என்று கருதுவதாக தெரிவித்தார்.
மேலும், தியேட்டர்கள், மால்கள், திருமண மண்டபங்கள், வணிக வளாகங்கள், தொழிற்சாலைகள் மற்றும் பிற நிறுவனங்கள் போன்ற இடங்களில் போதிய அளவு விசாலமான பார்க்கிங் வசதியை உரிமையாளர்கள் செய்திருக்க வேண்டியது கட்டாயம் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இந்த விதிமுறைகள் வரும் ஏப்ரல் 1-ஆம் தேதி முதல் தெலங்கானா மாநிலம் முழுவதும் அமலுக்கு வருகின்றன.