சீனா தனது தொலைக்காட்சி மற்றும் வானொலி நிலையங்களை ஒன்றிணைத்து உலகின் மிகப் பெரிய ஊடகத் தளங்களில் ஒன்றாக உருவாக்குவதற்கான திட்டங்களை செயல்படுத்த வாய்ஸ் ஆஃப் சீனா உறுதிப்படுத்தியுள்ளது. இதுகுறித்து சீனாவின் உத்தியோகபூர்வ செய்தி நிறுவனமான சின்குவா வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது: -
சீனாவின் அரசு தொலைக்காட்சி (சிசிடிவி), மற்றும் சீனாவின் சர்வதேச வானொலி ஆகியவற்றை இணைத்து ஒரே தளமாக வாய்ஸ் ஆப் சீனா என்ற பெயரில் புதிய ஒளிபரப்பு சக்தியாக உருவாக்கப்பட உள்ளது. பொதுமக்கள் கருத்துக்களை வலுப்படுத்தவும், மேம்படுத்தவும், மல்டிமீடியா ஒருங்கிணைப்புகளை தூண்டவும், சர்வதேச தகவல் தொடர்புகளை வலுப்படுத்தவும் இது உதவும். மேலும் இதன் மூலம் 14 ஆயிரத்திற்கும் அதிகமானோருக்கு வேலை வாய்ப்பை உருவாக்கும் என்று தெரிகிறது
இரண்டாம் உலகப் போரின் போது அமெரிக்க அரசாங்கத்தால் உருவாக்கப்பட்ட வாய்ஸ் ஆஃப் அமெரிக்கா வானொலி சேவையைப் போல் சீனாவில் வாய்ஸ் ஆஃப் சீனா என்ற ஒருங்கிணைந்த ஒளிபரப்பு சேவை உருவாக்கப்பட உள்ளது. இதன் மூலம் சீனாவின் பாரம்பரிய மற்றும் பண்பாட்டு விசயங்களை உலகறிய எடுத்துச் செல்லப்பட உள்ளது.
சி.சி.டிவி, வாஷிங்டனிலும், கென்யாவின் தலைநகரான நைரோபியாவிலும், சீனர்கள் அல்லாத செய்தியாளர்களிடமிருந்து செய்திகளை பெற்று சீன செய்தி ஊடகங்கள் வழங்கி வருகிறது. மேலும் சீனாவின் வானொலி ஒலிபரப்பு 65 மொழிகளில் ஒளிபரப்புகிறது. சீன அரசாங்கம் சீன மொழியை மேம்படுத்துவதற்காக கன்பூசியஸ் இன்ஸ்டிடியூட்ஸ் போன்ற கலாச்சார மையங்களை அமைத்துள்ளது. உலகெங்கிலும், பொதுமக்கள் கருத்தை ஒருங்கிணைக்கும் பெரும் முயற்சியை எடுத்துள்ளது.