சென்னை: புதுச்சேரி சட்டப்பேரவையில் பா.ஜ.க.வுக்கு ஓர் உறுப்பினர் கூட இல்லை. பா.ஜ.க.வின் மாநிலத் தலைவராக உள்ள சாமிநாதன் என்பவர் கடந்த சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிட்டு காப்புத்தொகை இழந்தவர். மேற்படி சாமிநாதன் மற்றும் பா.ஜ.க. பொருளாளர் சங்கர், பா.ஜ.க.வைச் சேர்ந்த பள்ளிக்கூட அதிபரும், ஆர்.எஸ்.எஸ். ஊழியருமான செல்வகணபதி ஆகிய மூவரையும் நடுவண் அரசுக்கு, கிரேன்பேடி பரிந்துரை செய்து உள்துறையின் ஒப்புதல் கடிதம் பெற்று, அம்மூவருக்கும் பதவியேற்பு உறுதிமொழியும் செய்து வைத்தார்.
ஆனால், அவர்கள் நியமனத்தை ஏற்க மறுத்த சபாநாயகர், நியமன எம்.எல்.ஏ.க்களுக்கு மாத ஊதியம் அளிக்க தடை விதித்தார். இதனை அடுத்து, ஆளுநரின் இந்த நியமனத்துக்கு தடை விதிக்கக் கோரி புதுச்சேரி ராஜ்பவன் தொகுதி எம்.எல்.ஏ. லெட்சுமி நாராயணன் தொடர்ந்த வழக்கு, ஆளுநருக்கு அதிகாரம் அளிக்கும் சட்டப்பிரிவினை ரத்து செய்யக் கோரி தொடரப்பட்ட வழக்கு, சட்டப்பேரவைக்குள் அனுமதிக்கக் கோரி நியமன எம்.எல்.ஏ.-க்கள் சார்பில் தொடரப்பட்ட வழக்கு என 3 வழக்குகள் சென்னை உயர்நீதி மன்றத்தில் விசாரிக்கப்பட்டது.
தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி மற்றும் நீதிபதி எம்.சுந்தர் அடங்கிய அமர்வு விசாரித்து வந்த இந்த வழக்குகளில் இன்று உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. அரசியலமைப்புச் சட்ட அதிகாரத்தின் படியே 3 பேரின் நியமனம் நடைபெற்றுள்ளது, எனவே, அவர்கள் பேரவைக்குள் செல்வதைத் தடுக்க முடியாது என குறிப்பிட்ட நீதிபதிகள், அவர்கள் நியமனம் செல்லும் என என தீர்ப்பளித்தனர்.
இதையடுத்து நியமன எம்.எல்.ஏக்கள் மூன்று பேரும் துணை நிலை ஆளுநர் கிரண் பேடியை சந்தித்து பேசினர்.