புதுதில்லி: 6 மாநிலங்களின் 25 மாநிலங்களவை உறுப்பினர்களுக்கான வாக்குப்பதிவு தொடங்கி நடைபெற்று வருகிறது. இன்று மாலையே முடிவுகள் அறிவிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
16 மாநிலங்களில் காலியாக உள்ள 58 உறுப்பினர்களுக்கான தேர்தல் அறிவிப்பை தேர்தல் ஆணையம் முறைப்படி அறித்திருந்தது. இதில், கடந்த 15-ஆம் தேதி வேட்புமனுக்கள் திரும்பப் பெறும் இறுதி நாளில், 10 மாநிலங்களைச் சேர்ந்த 33 வேட்பாளர்கள் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டனர்.
இந்நிலையில், மீதமுள்ள 6 மாநிலத்தின் 25 உறுப்பினர்களைத் தேர்வு செய்வதற்கான வாக்குப் பதிவு இன்று காலை 9 மணிக்கு தொடங்கி மாலை 4 மணி வரை நடைபெறுகிறது. மாலை 5 மணிக்கு பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படும் என தெரிகிறது.
இதில், உத்தரபிரதேசம், மேற்கு வங்கம், கர்நாடகா, ஜார்க்கண்ட், சத்தீஷ்கர் மற்றும் தெலுங்கானா ஆகிய 6 மாநிலங்களில் இருந்து தேர்வு செய்யப்பட உள்ளனர். அந்தந்த மாநில சட்டசபையில் இதற்கான வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. சட்டமன்ற உறுப்பினர்கள் வாக்களித்து வருகின்றனர்.
உத்தரப்பிரதேசத்தில் பாஜக வேட்பாளராக மத்திய நிதி அமைச்சர் அருண் ஜேட்லி, சமாஜ்வாதி வேட்பாளராக நடிகை ஜெயா பச்சன் போட்டியிடுகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
இத்தேர்தலையடுத்து மாநிலங்களவையில் பாஜகவின் பலம் அதிகரிக்கும் என கூறப்படுகிறது.