சென்னை, திருச்சி விமான நிலையங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த இளைஞர் கைது

சென்னை, திருச்சி விமான நிலையத்திற்கு தொலைபேசியில் வெடிகுண்டு மிரட்டல் விடுத்த இளைஞரை போலீஸார் கைது செய்து
சென்னை, திருச்சி விமான நிலையங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த இளைஞர் கைது

திருச்சி: சென்னை, திருச்சி விமான நிலையத்திற்கு தொலைபேசியில் வெடிகுண்டு மிரட்டல் விடுத்த இளைஞரை போலீஸார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

திருச்சியில் உள்ள அவசர போலீஸ் கட்டுப்பாட்டு அறை தொலைபேசிக்கு நேற்று இரவு வந்த அழைப்பில் பேசிய நபர், சென்னை மீனம்பாக்கத்தில் உள்ள சர்வதேச விமான நிலையம், மதுரை, திருச்சி விமான நிலையங்களில் வெடிகுண்டு வைக்கப்பட்டுள்ளது. அது சிறிது நேரத்தில் வெடித்து சிதறும் என்று கூறி இணைப்பை துண்டித்தார்.

இதனால் அதிர்ச்சியடைந்த போலீஸார் உடனடியாக சென்னை, திருச்சி, மதுரை ஆகிய விமான நிலைய அதிகாரிகளை தொடர்பு கொண்டு தகவலை தெரிவித்தனர். இதையடுத்து விமான நிலையத்தில் பாதுகாப்பு பணியில் இருந்த மத்திய பாதுகாப்பு படையினர் உஷார் படுத்தப்பட்டனர்.

விமான நிலைய வளாகம் முழுவதும் பாதுகாப்பு படையினர், வெடிகுண்டு நிபுணர்கள் மோப்ப நாய் மூலம் தீவிர சோதனையில் ஈடுபட்டனர். பயணிகள் வருகை மற்றும் புறப்படும் இடம், விமான ஓடுபாதை உள்ளிட்ட பகுதியில் அதிரடியாக சோதனை நடத்தப்பட்டது. இன்று அதிகாலை 3 மணி முதல் 6 மணி வரை சோதனை நடைபெற்றது.

இதே போல் சென்னை, மதுரை விமான நிலையங்களிலும் அதிரடியாக சோதனை நடத்தப்பட்டது. இதில் வெடிகுண்டு எதுவும் சிக்கவில்லை. வதந்தியை பரப்பும் நோக்கத்துடன் அந்த நபர் பேசியிருப்பது தெரியவந்தது. 

இது குறித்து திருச்சி போலீஸார் விசாரணை செய்தனர். போலீஸார் விசாரணையில், திருச்சி மாவட்டம் லால்குடி அருகே உள்ள பூவாளூர் பகுதியில் இருந்து தொலைபேசி அழைப்பு வந்தது கண்டுபிடிக்கப்பட்டது. 

இதையடுத்து லால்குடி போலீஸார் அதிரடி விசாரணையில் ஈடுபட்டனர். அப்போது போலீஸ் கட்டுப்பாட்டு அறையை தொடர்பு கொண்டு மிரட்டல் விடுத்த திருச்சி மாவட்டம் லால்குடி அருகே உள்ள பூவாளூரை சேர்ந்த சுப்பிரமணி(30) என்பவரை லால்குடி போலீஸார் கைது செய்தனர். அப்போது சுப்பிரமணி குடிபோதையில் இருந்தார். தொடர்ந்து அவரிடம் நடத்திய விசாரணையில் மது போதையில் சென்னை, திருச்சி, மதுரை ஆகிய விமான நிலையங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்ததாக தெரிவித்துள்ளார். 

கடந்த ஞாயிற்றுக்கிழமை இரவு சென்னை விமான நிலையத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த, சென்னை பள்ளிக்கரணை பகுதியில் வசிக்கும் மென்பொருள் பொறியாளர்கள் திருச்சிராப்பள்ளி மாவட்டம் துறையூர் பகுதியை சேர்ந்த தீபு ஆனந்த் (29), சென்னை ஜல்லடியன்பேட்டையை சேர்ந்த சக்தி சரவணன் (28) ஆகியோரை போலீஸார் திங்கள்கிழமை கைது செய்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com