சென்னை: சென்னை விமான நிலையத்திற்கு மீண்டும் மர்ம நபர்கள் தொலைபேசியில் வெடிகுண்டு மிரட்டல் விடுத்துள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
சென்னை காவல் ஆணையர் அலுவலக தொலைபேசிக்கு ஒரு அழைப்பு வந்தது. அதில் பேசிய நபர், மீனம்பாக்கத்தில் உள்ள சர்வதேச விமான நிலையத்தை வெடிகுண்டு வைத்து தகர்க்கப் போவதாகக் கூறி இணைப்பை துண்டித்தார்.
இது தொடர்பாக விமான நிலைய அதிகாரிகளுக்கு உடனடியாக தகவல் தெரிவிக்கப்பட்டது. மேலும் விமான நிலையத்துக்கு பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டது. சர்வதேச விமான நிலையம் முழுவதும் வெடிகுண்டு தடுப்புப் பிரிவு போலீஸார் சோதனை செய்து வருகின்றனர்.
கடந்த ஞாயிற்றுக்கிழமை இரவு சென்னை பெருநகர காவல்துறையின் கட்டுப்பாட்டு அறை தொலைபேசிக்கு வந்த அழைப்பில் பேசிய நபர், மீனம்பாக்கத்தில் உள்ள சர்வதேச விமான நிலையத்தை வெடிகுண்டு வைத்து தகர்க்கப் போவதாகக் கூறி இணைப்பை துண்டித்தார்.
இதனால் வதந்தியை பரப்பும் நோக்கத்துடன் அந்த நபர் பேசியிருப்பது தெரியவந்தது. இது குறித்து சென்னை போலீஸார் விசாரணை செய்தனர். போலீஸார் விசாரணையில், சென்னை பள்ளிக்கரணை பகுதியில் வசிக்கும் மென்பொருள் பொறியாளர்கள் திருச்சிராப்பள்ளி மாவட்டம் துறையூர் பகுதியை சேர்ந்த தீபு ஆனந்த் (29), சென்னை ஜல்லடியன்பேட்டையை சேர்ந்த சக்தி சரவணன் (28) ஆகியோர்தான் வெடிகுண்டு மிரட்டல் விடுத்த நபர்கள் என்பது தெரியவந்தது. இது தொடர்பாக பள்ளிக்கரணை போலீஸார் வழக்குப் பதிவு செய்து, அவர்கள் இருவரையும் திங்கள்கிழமை கைது செய்தனர். இந்நிலையில் இன்று மீண்டும் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த 10 நாட்களில் சென்னை விமான நிலையத்திற்கு 3வது முறையாக வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.