சென்னை: தமிழகத்தில் ஜூன் 1-ஆம் தேதி அனைத்துப் பள்ளிகளும் திறக்கப்படும் என பள்ளிக் கல்வித்துறை தெரிவித்துள்ளது.
இதுகுறித்து பள்ளிக் கல்வித்துறை வெளியிட்டுள்ள உத்தரவில், மாணவர்களின் மன அழுத்தத்தைக் குறைக்கவும் ஆரோக்கியமற்ற போட்டிச் சூழலைத் தவிர்க்கும் நோக்குடன், நடப்பு கல்வி ஆண்டிலும் பத்தாம் வகுப்பு, பன்னிரண்டாம் வகுப்புப் பொதுத்தேர்வில் மாநில அளவிலும் மாவட்ட அளவிலும் அதிக மதிப்பெண் பெற்ற மாணவ, மாணவிகளின் பெயர்களை அறிவிக்கும் நடைமுறையைக் கைவிடுமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.
இதேபோல் ஜூன் ஒன்றாம் தேதி (வெள்ளிக்கிழமை) அனைத்துப் பள்ளிகளும் திறக்கப்படும் என்றும், அதை முன்னிட்டுப் பள்ளிகளில் தண்ணீர்த் தொட்டி மற்றும் கழிவறைகளை சுத்தம் செய்து பழுது இருந்தால் சரி செய்ய வேண்டும் என்றும் அந்த உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.