புதுதில்லி: எடியூரப்பாவின் தலைவிதியை அவரின் கடிதம்தான் தீர்மானிக்கும் என்றும் எடியூரப்பாவுக்கு எதிரான வழக்கை இரவில் விசாரித்த உச்ச நீதிமன்றத்துக்கு சல்யூட் என்று முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் டுவிட்டரில் தெரிவித்துள்ளார்.
எடியூரப்பாவை கர்நாடக முதல்வராக பதவியேற்க ஆளுநர் நேற்றிரவு அழைப்பு விடுத்தார். இதனை எதிர்த்து காங்கிரஸ் மற்றும் மஜத உச்சநீதிமன்றத்தில் இரவோடு இரவாக வழக்கு தொடர்ந்தது.
இந்த வழக்கு மீதான விசாரணை உச்சநீதிமன்றத்தில் அவசர வழக்காக ஏற்கப்பட்டு நள்ளிரவு 1.45 மணிக்கு நீதிபதிகள் ஏ.கே.சிக்கிரி, அசோக் பூஷன் மற்றும் எஸ்.ஏ.போப்தே ஆகியோர் கொண்ட அமர்வு முன் விசாரணைக்கு வந்தது.
இந்த மனு மீதான விசாரணை விடிய விடிய சுமார் இரண்டரை மணிநேரம் நடைபெற்றது. இந்த வழக்கில் மத்திய அரசு சார்பாக துஷர் மேத்தா, முகுல் ரோத்தகி, கே.கே.வேணுகோபால் ஆகிய 3 வழக்குரைஞர்கள் ஆஜராகி வாதிட்டனர்.
இரண்டரை மணிநேரமாக நடைபெற்ற காரசார வாதங்களுக்கு பிறகு எடியூரப்பா பதவியேற்பதற்கு தடை விதிக்க முடியாது என உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்தது.
எம்எல்ஏக்களின் கடிதங்கள் மேலும் ஆதரவு எம்எல்ஏக்களின் கடிதங்களை நாளை காலை 10.30 மணிக்குள் தாக்கல் செய்ய எடியூரப்பாவுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.
இந்நிலையில், காங்கிரஸ் மூத்த தலைவர்களில் ஒருவரும், முன்னாள் மத்திய அமைச்சருமான ப.சிதம்பரம் தனது டுவிட்டர் பக்கத்தில், எடியூரப்பாவுக்கு எதிரான வழக்கை நள்ளிரவில் விசாரித்த உச்ச நீதிமன்றத்திற்கு சல்யூட். எடியூரப்பாவாக நானிருந்தால் வழக்கு விசாரணைக்கு வரும் நாளை காலை 10.30 வரை பதவியேற்க மாட்டேன். எடியூரப்பாவின் தலைவிதியை ஆளுநரிடம் அவர் அளித்த கடிதம்தான் தீர்மானிக்கும். அந்தக் கடிதத்தில் 104 எம்.எல்.ஏக்கள் ஆதரவு இருப்பதாகவே எடியூரப்பா குறிப்பிட்டு இருப்பார். ஆளுநரின் அழைப்பு கடிதத்திலும் எம்.எல்.ஏக்களின் எண்ணிக்கையை குறிப்பிடவில்லை என்று ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார்.