தந்தையின் குடிப்பழக்கத்தால் மனமுடைந்து தற்கொலை செய்துக்கொண்ட திருநெல்வேலி மாணவர் தினேஷ் பிளஸ் 2 பொதுத்தேர்வு முடிவில் 85 சதவீத மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்றுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
திருநெல்வேலி மாவட்டம் சங்கரன்கோவிலைச் சேர்ந்த மாணவர் தினேஷ். பிளஸ் டூ முடித்து விட்டு நீட் தேர்வு எழுத தயார் செய்து வந்த நிலையில், தனது தந்தையின் தொடர் குடிப்பழக்கத்தால் மனவுளைச்சலால், கடந்த மே 2-ஆம் தேதி காலை ரயில்வே மேம்பாலத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இவரது தற்கொலை மாநிலம் முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. தற்கொலைக்கு காரணமாக தனது தந்தைக்கும் முதல்வருர் மற்றும் பிரதமருக்கும் ஒரு கடிதம் எழுதி வைத்திருந்தார். அதில், தனது இறப்பிற்கு பிறகாவது குடிக்காமால் இருங்கள் என தனது தந்தைக்கு வலியுறுத்தியதுடன், தனக்கு இறுதி சடங்குகள் எதையும் அவர் செய்யக் கூடாது என்றும் குறிப்பிட்டிருந்தார்.
மேலும் டாஸ்மாக் மதுபான கடைகளை பிரதமர் மற்றும் முதல்வர் தலையிட்டு மூட வேண்டும் என்றும் அப்படி மூடவில்லையென்றால், தான் ஆவியாக வந்து மதுக்கடைகளை ஒழிப்பேன் என தெரிவித்திருந்தார்.
இந்நிலையில், தமிழகத்தில் பிளஸ் டூ தேர்வு முடிவுகள் நேற்று புதன்கிழமை வெளியாகின. பொதுத்தேர்வு முடிவுகளில் தினேஷ் 1024 மதிப்பெண்களை எடுத்து தேர்ச்சி பெற்றுள்ளது தெரியவந்துள்ளது.
தினேஷ் எடுத்துள்ள மதிப்பெண்கள் விபரம்:
* தமிழ் - 194
* ஆங்கிலம் - 148
* இயற்பியல் - 186
* வேதியியல் - 173
* உயிரியல் - 129
* கணிதம் - 194
= மொத்தம் - 1024
திருநெல்வேலி மாவட்டத்தில் மொத்தம் 119 பள்ளிகள் பிளஸ் டூ தேர்வில் 100 சதவிகித தேர்ச்சி பெற்றுள்ளன.