புதுதில்லி: தில்லியில் 16 வயது சிறுமி ஒருவர் 12 துண்டாக வெட்டிக் கொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் பொதுமக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
ஜார்கண்ட் மாநிலத்தைச் சேர்ந்த ஏழை இளம் பெண் சோனி(16). இவரை தில்லியில் நல்ல வேலையில் சேர்த்துவிடுவதாக கூறி, கர்கெட்டாவை சேர்ந்த மன்ஜித் என்பவர் மூன்று ஆண்டுகளுக்கு முன்பு தில்லி அழைத்து வந்துள்ளார். அங்கு அந்த சிறுமிக்கு வீட்டு வேலை செய்ய வேலை வாங்கி கொடுத்துள்ளார்.
ஆனால், சம்பளத்தை அந்த சிறுமியிடம் இருந்து மாதம் மாதம் மன்ஜித் பறித்து செல்வது வாடிக்கையாக இருந்துள்ளது.
இதையடுத்த சிறுமி கடந்த ஒரு வருடத்திற்கு முன் வேலையை விட்டுவிட்டு சென்றவர், கடந்த மே 3-ஆம் தேதி கர்கெட்டா சென்று தனது சம்பள பணத்தை கேட்டு வந்துள்ளார்.
இந்த நிலையில் தில்லி மியான்வாலி நகரில் உள்ள ஒரு வாய்க்காலில் சிறுமி பிணமாக கிடந்துள்ளார். அவரது உடல் 12 துண்டாக வெட்டப்பட்டு இருந்தது.
இது குறித்து போலீஸார் வழக்குப்பதிவு செய்து அந்த பகுதியில் உள்ள சிசிடிவி கேமிராக்களில் பதிவான காட்சிகளை ஆய்வு செய்தனர். அதில், மன்ஜித் கொலை செய்தது உறுதிபடுத்தப்பட்டது. சிறுமி கொலை செய்யப்பட்டதில் இருந்து ஜார்கண்ட் மாநிலத்தைச் சேர்ந்த ஒருவர் காணாமல் போயுள்ளதும் போலீஸாரின் ஆய்வில் தெரியவந்துள்ளது.
இதைத் தொடர்ந்து போலீஸார் அவரை கைது செய்தனர். போலீஸார் அவரிடம் நடத்திய முதல்கட்ட விசாரணையில் சிறுமியை கொலை செய்ததாக ஒப்புக்கொண்டுள்ளார். அதற்கு ஒரு பெண் உள்பட 2 பேர் உதவியுடன் அந்த சிறுமியை கொன்றதாக ஒப்புக்கொண்டுள்ளார். இச்சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.