தூத்துக்குடி வன்முறையில் பாதிக்கப்பட்டவர்களை நேரில் சந்தித்து ஆறுதல் கூற காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக நடைபெற்று வரும் போராட்டம் நேற்று 100-வது நாளை எட்டியது. நூறாவது நாளையொட்டி, ‘ஸ்டெர்லைட் எதிர்ப்பு தூத்துக்குடி மாவட்ட மக்கள் கூட்டமைப்பு’ சார்பில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டு இருந்தது. இதற்கு பல்வேறு அமைப்புகள் ஆதரவு தெரிவித்தன. எனினும் தூத்துக்குடியில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இந்நிலையில், நேற்று நடந்த போராட்டம் வன்முறையாக உருவெடுத்தது.
கூட்டத்தைக் கலைக்க போலீஸார் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் இரு பெண்கள் உள்பட 10 பேர் உயிரிழந்தனர். துப்பாக்கிச்சூடு, போலீஸ் தடியடியில் 65-க்கு மேற்பட்டோர் காயமடைந்தனர். இந்நிலையில் இன்றும் அங்கு பதற்ற நிலை தொடர்கிறது.
அண்ணாநகரில் போலீசாருக்கும் பொதுமக்களுக்கும் இடையே முதலில் கல்வீச்சு நடைபெற்றது. இருதரப்பினரும் ஒருவர் மீது ஒருவர் கல் வீச துவங்கினார்கள். போலீசார் திடீரென்று துப்பாக்கியால் சுட துவங்கினார்கள். அண்ணாநகர் பகுதியில் நடந்த துப்பாக்கி சூட்டில் இளைஞர் காளியப்பன் (22) உயிரிழந்தார். 5 பேர் துப்பாக்கி சூட்டில் படுகாயமடைந்தனர்.
இதையடுத்து தூத்துக்குடி வன்முறையில் பாதிக்கப்பட்டவர்களை நேரில் சந்தித்து ஆறுதல் கூற காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தூத்துக்குடியில் 144 தடை உத்தரவு விலக்கப்பட்ட பின், ராகுல் தூத்துக்குடி வருவார் என காங்கிரஸ் கட்சி தரப்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.