அகர்தலா: சரக்கு மற்றும் சேவை வரி(ஜிஎஸ்டி) அமலாக்கம், பணமதிப்பிழப்பு நடவடிக்கை ஆகியவை பிரதமர் நரேந்திர மோடி மேற்கொண்ட புரட்சிகரமான நடவடிக்கைகள் என குடியரசு துணைத் தலைவர் வெங்கய்யா நாயுடு புகழாரம் சூட்டி உள்ளார்.
திரிபுராவின் அகர்தலா பல்கலைகழகத்தில் நடைபெற்ற 11வது பட்டமளிப்பு விழாவில் குடியரசு துணைத் தலைவர் வெங்கய்யா நாயுடு கலந்துகொண்டு பேசுகையில், நாட்டின் வளர்ச்சிக்காக மத்திய அரசு பல்வேறு திட்டங்களை அறிமுகப்படுத்தியதற்காக பிரதமர் மோடிக்கு பாராட்டு தெரிவித்த வெங்கய்யா நாயுடு, சரக்கு மற்றும் சேவை வரி(ஜிஎஸ்டி) அமலாக்கம், பணமதிப்பிழப்பு நடவடிக்கை ஆகியவை பிரதமர் மோடி மேற்கொண்ட புரட்சிகர நடவடிக்கைகள் என புகழாரம் சூட்டினார்.
கடந்த ஏப்ரல் மாதம் சுமார் 1.4 லட்சம் கோடி ரூபாய் என்ற வருவாய் அளவை, ஜி.எஸ்.டி எட்டியிருப்பதாகக் குறிப்பிட்டார். இதன் மூலம், இந்த புதிய வரி விதிப்பு திட்டம், நாட்டின் வளர்ச்சிக்கு பேருதவி புரியும் என்ற நம்பிக்கையை ஏற்படுத்தியிருப்பதாக வெங்கய்யா நாயுடு கூறினார்.
5 ஆண்டுகளுக்கு பிறகு திரிபுரா பல்கலைக் கழகத்தின் 11வது பட்டமளிப்பு விழாவில், 142 பேர் முனைவர் பட்டம் பெற்றனர். பட்டம் பெற்ற 400 மாணவர்களில் பலர் தங்கம் மற்றும் வெள்ளி பதக்கங்களை பெற்றனர்.