சென்னையில் 45 கி.மீ தூரத்திற்கு மெட்ரோ ரயில் பணிகள் நடைபெற்று வருகிறது. பல்வேறு இடங்களில் சுரங்கபாதை வழியாகவும், மேம்பாலம் வழியாகவும் மெட்ரோ ரயில் சேவையானது செயல்பட்டு வருகிறது.
இந்நிலையில், மெட்ரோ ரயில் சேவையை மேலும் விரிவுபடுத்தும் நோக்குடன் நேரு பூங்கா-சென்ட்ரல் மற்றும் சின்னமலை-டி.எம்.எஸ் இடையே மெட்ரோ ரயில் சேவையை நேற்று முன்தினம் முதல்வர் தொடங்கி வைத்தார். இந்த புதிய சேவையானது முக்கியத்துவம் வாய்ந்ததாக காணப்படுகிறது. குறிப்பாக விமான நிலையத்தை இணைக்கும் இந்த வழித்தடம் சென்ட்ரல் மற்றும் எழும்பூர் ரயில் நிலையத்தில் இருந்து விரைவாக விமான நிலையத்திற்கு பயணிகள் சென்றடைய வசதியாக அமைந்துள்ளது.
இதேபோல், நேற்று முன்தினம் முதல் நாள் மட்டுமே 50 ஆயிரம் பேர் மெட்ரோ ரயில் சேவையை பயன்படுத்தியுள்ளனர். குறிப்பாக சென்ட்ரல் மற்றும் நேரு பூங்கா, சின்னமலை முதல் டி.எம்.எஸ் ஆகிய இரண்டு வழித்தடங்களில் மட்டும் சுமார் 15 ஆயிரம் பேர் வரையில் இலவசமாக பயணம் செய்துள்ளதாகவும் மெட்ரோ ரயில் அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர். இதேபோல், சென்னை சென்ட்ரல் - விமான நிலையம்; டி.எம்.எஸ் - சின்னமலை வழித்தட மெட்ரோ ரயிலில் நேற்று ஒரே நாளில் ஒரு லட்சத்து 20 ஆயிரம் பேர் பயணம் மேற்கொண்டுள்ளனர்.
3- வது நாளாக இன்றும் பொதுமக்களின் வசதிக்காக இந்த வழித்தடங்களில் மெட்ரோ ரயில் சேவை இலவசமாக வழங்கப்படும் என மெட்ரோ ரயில் நிர்வாகம் அறிவித்துள்ளது. இதனால், பொதுமக்கள் உற்சாகம் அடைந்துள்ளனர்.