உலகப்புகழ் பெற்ற திருவாரூர் தியாகராஜர் சுவாமி கோயிலின் ஆழித்தேரோட்டம் இன்று வெகுவிமர்சியாக தொடங்கி நடைபெற்று வருகிறது.
சைவ சமயத்துக்கு தலைமை பீடமாக விளங்குவது, பஞ்சபூத தலங்களுள் பூமிக்குரிய தலமாக விளங்குவது, சப்த விடங்கர் தலங்களுள் முதன்மையானது என பல்வேறு சிறப்புகளை உடையது திருவாரூர் தியாகராஜர் கோயில். இக்கோயிலின் பங்குனி உத்திர விழாவின்போது ஆழித்தேரோட்டம் சிறப்பாக நடைபெறுவது வழக்கம். ஆழித்தேரோட்டத்தைக் காண திருஞானசம்பந்தரும், திருநாவுக்கரசரும் இங்கு வந்து தங்கியிருந்ததாக உள்ள குறிப்புகளின் மூலம் 7 -ஆம் நூற்றாண்டுக்கு முன்னரே தேர்த் திருவிழா நடைபெற்றது என்பதை அறிய முடிகிறது. இந்த ஆழித்தேரோட்டத்தில் தனது பரிவாரங்களுடன் தியாகராஜ சுவாமி எழுந்தருளி பவனி வருவதைக் காண இந்திரன் முதலானோர் வருவதாக ஐதீகம்.
ஆசியாவிலேயே மிக பெரியது என்ற பெருமை பெற்ற ஆழித்தேர் இக்கோயிலின் தேராகும். இந்நிலையில், திருவாரூர் தியாகராஜர் கோயிலின் ஆழித்தேரோட்டம் இன்று தொடங்கியுள்ளது. இந்த நிகழ்ச்சியில் அமைச்சர் காமராஜ், ஆட்சியர் நிர்மல்ராஜ் தேரை வடம் பிடித்து இழுத்து தொடங்கி வைத்தனர். தொடர்ந்து ஆழித்தேரை பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வடம் பிடித்து இழுத்து சாமி தரிசனம் செய்தனர்.
இத்திருவிழாவை காண தமிழகம் மட்டுமல்லாது வெளி மாநிலத்தில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் திருவாரூர் வந்துள்ளனர். அதனால் திருவாரூரில் ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.