உத்தரப் பிரதேசத்தில் கைரானா மக்களவைத் தொகுதி இடைத் தேர்தலில் பாஜகவின் மரிகங்காவை எதிர்த்து போட்டியிட்ட ராஷ்ட்டீய லோக் தளம் கட்சியின் வேட்பாளர் தபஸ்சும் ஹசன் 19900 வாக்குகள் வித்தியாசத்தில் தொடர்ந்து முன்னிலையில் இருந்து வருகிறார் என தகவல் வெளியாகி உள்ளது.
உத்தரப் பிரதேசத்தின் கைரானா, மகாராஷ்டிரத்தின் பால்கர், பாந்தரா-கோந்தியா, நாகாலாந்தின் ஒரு தொகுதி உள்பட 4 மக்களவைத் தொகுதிகளுக்கு திங்கள்கிழமை இடைத்தேர்தல் நடைபெற்றது.
இது தவிர கேரளம் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் உள்ள 9 சட்டப் பேரவைத் தொகுதிகளிலும் இடைத்தேர்தல் நடைபெற்றது. இன்று வியாழக்கிழை (மே 31) வாக்கு எண்ணிக்கை நடைபெற்று, முடிவுகள் அறிவிக்கப்பட்டு வருகின்றன.
உத்தரப் பிரதேசத்தில் நூர்பூர் பேரவைத் தொகுதியில் 61 சதவீத வாக்குகளும், கைரானாவில் 51 சதவீத வாக்குகளும் பதிவாயின. இதில் பல இடங்களில் வாக்குப்பதிவு இயந்திரங்களில் பிரச்னை ஏற்பட்டதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. எனினும், சில இடங்களில் சிறிய அளவில் ஏற்பட்ட தொழில்நுட்பப் பிரச்னை பெரிதுபடுத்தப்படுவதாக தேர்தல் ஆணையம் கூறியுள்ளது.
உத்தரப் பிரதேசத்தில் ஆளும் கட்சியான பாஜக, இந்த இடைத் தேர்தலில் வெற்றி பெற்று தனது பலத்தை நிரூபிக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளது. மேற்கு உத்தரப் பிரதேசத்தின் கைரானா மக்களவைத் தொகுதி இடைத் தேர்தலில் பாஜகவின் மரிகங்காவை எதிர்த்து ராஷ்ட்டீய லோக் தளம் கட்சியின் தபஸ்சும் ஹசன் போட்டியிட்டார். அவருக்கு சமாஜவாதி, பகுஜன் சமாஜ், காங்கிரஸ் ஆகிய கட்சிகள் ஆதரவு தெரிவித்துள்ளன.
இத்தொகுதியைத் தக்கவைத்து தனது பலத்தை நிரூபிக்க வேண்டிய கட்டாயத்தில் இருந்த பாஜக, 19900 வாக்குகள் வித்தியாசத்தில் தபஸ்சும் ஹசன் முன்னிலையில் இருந்து வருகிறார்.
இந்நிலையில், தபசம் ஹசன் செய்தியாளர்களிடம் கூறுகையில் இது சத்தியத்தின் வெற்றியாகும். ‘‘எதிர்கட்சிகள் ஒன்றிணைந்தால் பாஜகவுக்கு தோல்விதான் என்பதை எனது வெற்றி நிருபிக்கும். வாக்குப்பதிவு இயந்திரங்களில் தில்லுமுல்லு சதித்திட்டம் செய்தனர். இருப்பினும் மக்கள் தீர்ப்பு அவர்களை வீழ்த்தியுள்ளது. வரும்காலங்களில் எதிர்கொள்ள உள்ள எந்த தேர்தலிலும் மின்னணு வாக்குப்பதிவை நடத்த நாங்கள் விரும்பவில்லை என்று கூறினார்.
மேலும், 2019-ஆம் ஆண்டு நடைபெறவுள்ள மக்களவை தேர்தலிலும் இதே முறையில் பாஜகவை தோற்கடிப்போம். மோடியை வீட்டுக்கு அனுப்புவோம்’’ எனக் கூறினார்.