வங்கக்கடலில் உருவாகி கடந்த ஒரு வாரமாக மிரட்டி வந்த கஜா புயல் வெள்ளிக்கிழமை அதிகாலை நாகப்பட்டினத்துக்கும் வேதாரண்யத்துக்கும் இடையே தீவிரப் புயலாகக் கரையைக் கடந்தது.
கஜா புயல் காரணமாக 7 மாவட்டங்களில் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. திருச்சி மற்றும் சென்னை இடையேயான விமான சேவை பாதிக்கப்பட்டுள்ளது.
கஜாவின் கோராத்தாண்டவ சூறைக்காற்றால் வீடுகள், மரங்கள் சேதமடைந்துள்ள நிலையில் போக்குவரத்துகளும், தொலைத்தொடர்பு தகவல்கள் துண்டிக்கப்பட்டுள்ளது. புயல் சீற்றத்தின் காரணமாக திருச்சி மற்றும் சென்னை இடையேயான விமான சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இன்று அதிகாலை 2.30 மணிக்கு சார்ஜாவில் இருந்து திருச்சிக்கு வந்த ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம், காற்றின் வேகம் அதிகமாக இருந்ததால், திருச்சியில் தரையிறங்க முடியாமல் கொச்சிக்கு திருப்பி விடப்பட்டது.
இதே போன்று சென்னையில் இருந்து திருச்சிக்கு விமான நிலையத்துக்கு இன்று காலை 7.15 மணிக்கு வந்த தனியார் விமானம், பலத்த காற்றுடன் மழை பெய்து கொண்டிருந்ததால் தரையிறங்க முடியாமல் வானில் வட்டமடித்துக்கொண்டிருந்தது.
ஆனால், காற்றின் வேகம் அதிகமாக இருப்பதால் விமானி, விமானத்தை தரையிறக்க முடியாது என கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் தெரிவித்தார். இதைத் தொடர்ந்து விமானம் மீண்டும் சென்னைக்கே திருப்பி விடப்பட்டது.