சேலம்: கஜா புயல் காரணமாக சேலம் பெரியார் பல்கலைக்கழகம் மற்றும் அதன் கட்டுப்பாட்டில் உள்ள கல்லூரிகளில் இன்றைய தேர்வுகள் ஒத்திவைப்படுவதாக பல்கலைக்கழக நிர்வாகம் அறிவித்துள்ளது.
வங்கக்கடலில் உருவாகி கடந்த ஒரு வாரமாக மிரட்டி வந்த கஜா புயல் இன்று வெள்ளிக்கிழமை அதிகாலை நாகப்பட்டினத்துக்கும் வேதாரண்யத்துக்கும் இடையே தீவிரப் புயலாகக் கரையைக் கடந்தது. புயல் கரையைக் கடக்கும்போது மணிக்கு 100 முதல் 110 கி.மீ. வேகத்தில் பலத்த காற்று வீசியது. இதனால் நாகப்பட்டினம், திருவாரூர், கடலூர், புதுச்சேரி, காரைக்கால் உள்ளிட்ட இடங்களில் மிக பலத்த மழை பெய்து வருகிறது.
இந்நிலையில், கஜா புயல் காரணமாக தமிழகம், புதுச்சேரி முழுவதும் பரவலாக மழை பெய்து வருகிறது. இதையடுத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கடலூர், ராமநாதபுரம், தஞ்சாவூர், நாகப்பட்டினம், புதுக்கோட்டை, திருவாரூர், சிவகங்கை, தேனி, மதுரை, தூத்துக்குடி, நெல்லை, விருதுநகர், திருச்சி, அரியலூர், பெரம்பலூர், திருப்பூர், கரூர், விழுப்புரம், திண்டுக்கல், திருவண்ணாமலை, சேலம் உள்ளிட்ட மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை (நவ.16) அளித்து மாவட்ட ஆட்சியர்கள் உத்தரவிட்டுள்ளனர்.
தொடர் மழை காரணமாக சேலம் பெரியார் பல்கலைக்கழகம் மற்றும் அதன் கட்டுப்பாட்டில் உள்ள கல்லூரிகளில் இன்றைய தேர்வுகள் ஒத்திவைப்படுவதாக பல்கலைக்கழக நிர்வாகம் அறிவித்துள்ளது.