திருவனந்தபுரம்: கேரள மாநிலத்தை சேர்ந்த வயலின் இசைக் கலைஞர் பாலபாஸ்கர்(40) இன்று சிகிச்சை பலனின்றி மருத்துவமனையில் உயிரிழந்தார்.
கேரள மாநிலத்தை சேர்ந்த வயலின் இசைக் கலைஞர் பாலபாஸ்கர், கடந்த வாரம் தனது மனைவி மற்றும் மகள் தேஜஸ்வினியுடன் காரில் திருச்சூரில் கோயிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்துவிட்டு மாலை வீடு திரும்புகையில், பள்ளிப்புரம் அருகே கார் ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையோர மரத்தின் மீது மோதி விபத்துக்குள்ளானது.
இதில், பாலபாஸ்கருக்கு திருமணம் நடந்து 15 ஆண்டுகள் கடந்து பிறந்த மகள் தேஜஸ் வினி பாலா(2) பலத்த காயங்களுடன் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட ஒரு மணி நேரத்தில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
படுகாயமடைந்த பாலபாஸ்கர், அவரது மனைவி மற்றும் கார் ஓட்டுநர் 3 பேரும் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தனர்.
இந்நிலையில், பாலபாஸ்கர் இன்று சிகிச்சை பலனின்றி மருத்துவமனையில் உயிரிழந்தார்.
பாலபாஸ்கர் தனது 17 வயதில் வயலின் இசைக் கலைஞராக வலம் வந்தவர். பல மலையாள திரைப்படங்களுக்கு இசையமைத்துள்ளார். ஒரு எழுச்சிப் பாடகரான பாலபாஸ்கர், கேரளாவுக்கு வெளியிலும் இசை நிகழ்ச்சிகளிலும், கச்சேரிகளிலும் அவரது இசை அறியப்பட்டது. அவரது இசை ரசிகர்கள் மத்தியில் பிரபலமாக பேசப்பட்டு வந்தது.
அவரது இசை, வீடியோ கிளிப்புகள் ரசிகர்களால் சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகின்றன.