புதுதில்லி: பிரதமர் நரேந்திர மோடி ஊழல்வாதி எனக் காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி தெரிவித்துள்ளார்.
ரஃபேல் ஒப்பந்தத்தில் டசால்ட் நிறுவனத்தின் கூட்டு நிறுவனமாக ரிலையன்ஸ் நிறுவனத்தை தவிர வேறு எந்த ஒரு நிறுவனத்தையும் சேர்த்துக்கொள்ள இந்தியா தங்களுக்கு வாய்ப்பு வழங்கவில்லை என்று பிரான்ஸ் முன்னாள் அதிபர் ஹாலண்டே கூறியிருந்தார். இதே போல், ரிலையன்ஸ் நிறுவனத்தை கட்டாயமாக கூட்டு நிறுவனமாக சேர்த்துக் கொள்ள வேண்டும் என்று இந்தியா ஒப்பந்தத்தில் குறிப்பிட்டிருந்ததாக டசால்ட் மூத்த அதிகாரி ஒருவர் கூறியிதாக பிரான்ஸ் பத்திரிகையான மீடியா பார்ட் செய்தி வெளியிட்டுள்ளது.
இது குறித்து தில்லியில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி பேசுகையில், டசால்ட் நிறுவனத்தின் மூத்த அதிகாரியும் ரிலையன்ஸ் நிறுவனத்தை கூட்டு நிறுவனமாக சேர்க்க வேண்டும் என்ற கட்டாயம் உருவாக்கப்பட்டதாக கூறியிருப்பதன் மூலம் ரஃபேல் ஒப்பந்தத்தில் ஊழல் நடைபெற்றிருப்பதையே காட்டுவதாகத் தெரிவித்தார்.
எனவே, இந்திய பிரதமர் நரேந்திர மோடி ஒரு ஊழல்வாதி என்று நாட்டின் இளைஞர்களுக்கு தான் தயக்கம் இன்றி தெரிவித்துக் கொள்வதாக ராகுல்காந்தி கூறினார்.
பிரான்சில் டசால்ட் நிறுவனத்தின் தொழிற்சாலைக்குப் பாதுகாப்பு அமைச்சர் நிர்மலா சீதாராமன் தற்போது அவசரமாகச் செல்ல வேண்டிய காரணம் என்ன என்று கேள்வி எழுப்பினார். இந்திய அரசு என்ன சொல்ல விரும்புகிறதோ அதையே, பல்லாயிரம் கோடி ரூபாய் மதிப்பில் விமானங்களை வழங்க உடன்பாடு செய்துள்ள டசால்ட் நிறுவனம் சொல்லும். பிரதமர் இந்த இழப்பீடு இல்லாமல் ஒப்பந்தம் செய்யப்படமாட்டார் என்று அவர்களின் உள் ஆவணம் தெளிவாகக் கூறுகிறது என ராகுல்காந்தி தெரிவித்தார்.
இதனிடையே, மீடியா பார்ட் பத்திரிகை வெளியிட்ட தகவலுக்கு டசால்ட் நிறுவனம் மறுப்பு தெரிவித்துள்ளது. அதில், ரிலையன்ஸ் நிறுவனத்தை இந்திய பங்குதாரராக சுதந்திரமாகவே தேர்வு செய்தோம். பங்குதாரர் விவகாரத்தில் எங்களுக்கு எந்த கட்டாயமும் கொடுக்கப்படவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.