சென்னை: தாய்மொழி தான் வாழ்க்கையை உயர்த்தும் என குடியரசு துணைத் தலைவர் வெங்கய்யா நாயுடு தெரிவித்தார்.
சென்னை பல்கலைக்கழகத்தின் பட்டமளிப்பு விழா மற்றும் எத்திராஜ் கல்லூரியின் பவளவிழா உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள குடியரசு துணைத் தலைவர் வெங்கய்யா நாயுடு சென்னை வந்துள்ளார்.
மூன்று நாள் பயணமாக சென்னை வந்துள்ள குடியரசு துணைத்தலைவர் வெங்கையா நாயுடுவுக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. இதனிடையே இன்று சென்னை எத்திராஜ் கல்லூரியின் பவளவிழாவில் பங்கேற்று தனது பேச்சை முதலில் தமிழில் தொடங்கி பேசினார். தனக்கு தமிழ் தெரியும். ஆனால் பேச தொடர்ந்து வராது என்றவர் ஆங்கிலத்தை விட தாய்மொழி தான் மாணவர்களை உயர்த்தும் என்று கூறினார்.
மேற்கத்திய கலாச்சார மோகத்தால், நமது நாட்டு வரலாற்றை மறந்து வருவதாகவும், வீரபாண்டிய கட்டபொம்மன், பாரதியார், வ.உ. சிதம்பரம் போன்றோரின் சிறப்புகளை நாம் மறந்து விட்டதாக வருத்தம் தெரிவித்த வெங்கய்யா நாயுடு, தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி, ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு, தெலங்கானா முதல்வர் சந்திரசேகர ராவ் ஆங்கிலம் பயிலவில்லை, ஆனால், முதல்வராக உயர்வு பெற்றதாக பேசிய அவர், தாய்மொழி, தாய்நாடு மற்றும் பிறந்த ஊரை என்றென்றும் மறக்கக்கூடாது என்று மாணவர்களுக்கு வெங்கய்யா நாயுடு அறிவுரை வழங்கினார்.