ரஃபேல் ஒப்பந்த சர்ச்சை: குற்றச்சாட்டுக்கு டசால்ட் நிறுவனம் மீண்டும் மறுப்பு

ரஃபேல் ஒப்பந்தத்தில் ரிலையன்ஸ் நிறுவனத்தை இந்திய பங்குதாரராக சுதந்திரமாகவே தேர்வு செய்தோம்; எந்த கட்டாயமும் கொடுக்கப்படவில்லை 
ரஃபேல் ஒப்பந்த சர்ச்சை: குற்றச்சாட்டுக்கு டசால்ட் நிறுவனம் மீண்டும் மறுப்பு


பாரிஸ்: ரஃபேல் ஒப்பந்தத்தில் ரிலையன்ஸ் நிறுவனத்தை இந்திய பங்குதாரராக சுதந்திரமாகவே தேர்வு செய்தோம்; எந்த கட்டாயமும் கொடுக்கப்படவில்லை என டசால்ட் நிறுவனம் மீண்டும் மறுப்பு தெரிவித்துள்ளது. 

முந்தைய காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியின்போது, பிரான்ஸிடம் இருந்து 126 ரஃபேல் போர் விமானங்களைக் கொள்முதல் செய்வதற்கு முடிவு செய்யப்பட்டது. அதில், 18 விமானங்களைப் பறக்கும் நிலையில் இந்தியாவுக்கு வழங்குவது என்றும், எஞ்சிய 108 விமானங்களை பிரான்ஸின் தொழில்நுட்ப உதவியுடன் இந்தியாவில் தயாரிப்பது என்றும் முடிவு செய்யப்பட்டது. ஆனால், அந்த ஒப்பந்தம் இறுதிசெய்யப்படவில்லை.

அதன் பிறகு, ஆட்சிக்கு வந்த மத்திய பாஜக கூட்டணி அரசு, பிரான்ஸிடம் இருந்து பறக்கும் நிலையில் 36 ரஃபேல் போர் விமானங்களைக் கொள்முதல் செய்வதற்கு கடந்த 2016-ஆம் ஆண்டு ஒப்பந்தம் மேற்கொண்டது. மேலும், போர் விமானங்களின் உதிரி பாகங்களைத் தயாரிப்பதற்கான ஒப்பந்தம், ரிலையன்ஸ் குழும நிறுவனத்துக்கு வழங்கப்பட்டது. இதில், பெரிய அளவில் முறைகேடு நடைபெற்றுள்ளதாக காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டி வருகின்றன.

ரஃபேல் ஒப்பந்தம் குறித்து, 3 மனுக்கள் உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டிருந்த நிலையில், இந்த மனுக்கள் மீதான விசாரணை உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய், நீதிபதிகள் எஸ்.கே.கெளல், கே.எம்.ஜோசப் ஆகியோர் அடங்கிய அமர்வின் முன்பு, நேற்று புதன்கிழமை விசாரணைக்கு வந்தது. 

அப்போது நீதிபதிகள், இந்த ஒப்பந்த விவகாரம் தொடர்பாக, மனுக்களில் மிகக் குறைவான தகவல்களே அளிக்கப்பட்டுள்ளன. மனுக்களில் தெரிவிக்கப்பட்டுள்ள ஊழல் விவகாரம் குறித்து, தற்போது உச்சநீதிமன்றம் எதையும் உறுதி செய்யவில்லை. அதே வேளையில், ரஃபேல் ஒப்பந்த விவகாரத்தில் பின்பற்றப்பட்ட நடவடிக்கைகள் குறித்தும், ஒப்பந்தத்துக்காக மத்திய அரசு எடுத்த கொள்கை முடிவுகள் குறித்த அடிப்படை விவரங்களையும் உச்சநீதிமன்றம் விரிவாக அறிந்துகொள்ள விரும்புகிறது. மேலும், அதன் சட்டப்பூர்வத்தன்மையை ஆராயவும் விரும்புகிறது.

எனவே, அது தொடர்பான விவரங்களை, மூடி முத்திரையிட்ட 3 தனித்தனி உறைகளில் வைத்து, வரும் 29-ஆம் தேதிக்குள் மத்திய அரசு தாக்கல் செய்ய வேண்டும் என மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. வழக்கின் அடுத்த கட்ட விசாரணையை வரும் 31-ஆம் தேதிக்கு ஒத்திவைத்து.

இந்நிலையில், மீடியா பார்ட் பத்திரிகை வெளியிட்ட தகவலுக்கு டசால்ட் நிறுவனம் மறுப்பு தெரிவித்துள்ளது. அதில் ரிலையன்ஸ் நிறுவனத்தை இந்திய பங்குதாரராக சுதந்திரமாகவே தேர்வு செய்தோம். பங்குதாரர் விவகாரத்தில் எங்களுக்கு எந்த கட்டாயமும் கொடுக்கப்படவில்லை” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 

ஏற்கனவே, பிரான்சு முன்னாள் அதிபர் வெளியிட்ட கருத்து பெரும் சர்ச்சையாகி இருந்த நிலையில், ரஃபேல் ஒப்பந்தம் கையெழுத்தாக வேண்டுமெனில் இந்திய பங்குதாரராக ரிலையன்ஸ் நிறுவனம் இருக்க வேண்டும் என்பது கட்டாயமாக்கப்பட்டது என்றும் டசால்ட் நிறுவன ஆவணங்களில் இந்த தகவல் உள்ளதாக பிரான்ஸ் நாட்டின் புலனாய்வு செய்தி நிறுவனமான மீடியா பார்ட் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com