மதுரை: மீட்கப்பட்ட ஐம்பொன் சிலைகள் ஒவ்வொரு சிலையும் தலா ரூ 1 கோடி மதிப்பிலானவை என சிலை கடத்தல் தடுப்புப் பிரிவு ஐ.ஜி பொன். மாணிக்கவேல் தெரிவித்தார்.
மதுரை மாவட்டம் சோழவந்தான் அருகே பெருமாள் கோயிலில் இருந்து கடந்த இரு தினங்களுக்கு முன்பு கடத்தப்பட்ட 4 ஐம்பொன் சிலைகள் திண்டுக்கலில் மீட்கப்பட்டது.
சோழவந்தான் அருகே குருவித்துறையில் உள்ள சித்திர ரத வல்லப பெருமாள் கோயிலில் ஞாயிற்றுக்கிழமை அதிகாலையில் கருவறை கதவை உடைத்து பல கோடி ரூபாய் மதிப்புள்ள 4 ஐம்பொன் சிலைகளை அடையாளம் தெரியாத நபர்கள் திருடிச்சென்றனர். பழமை வாய்ந்த இக்கோயிலில் சிலைகளை திருடியவர்களை பிடிக்க 3 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன. அவர்களுக்கு உதவியாக தொழில்நுட்பக்குழுவினரும் ஈடுபட்டு வந்தனர்.
இதனிடையே, சிலைகள் திருட்டு தொடர்பாக விசாரணை மேற்கொள்வதற்காக சிலை கடத்தல் தடுப்புப் பிரிவு ஐ.ஜி பொன். மாணிக்கவேல் இன்று செவ்வாய்க்கிழமை குருவித்துறை கோயிலுக்கு வருகை தந்து, அங்கு சிலைகள் திருடப்பட்ட கருவறை, கோயில் வளாகம் ஆகியவற்றை பார்வையிட்டு கோயில் நிர்வாகிகளிடம் விசாரணை நடத்துகிறார். மேலும் சிலைகளை திருடியவர்கள் விட்டுச்சென்ற தடயங்களையும் பார்வையிட உள்ளார் என தகவல் வெளியானது.
இந்நிலையில், திண்டுக்கல் மாவட்டம் விளாம்பட்டி என்ற இடத்தில் சோழவந்தான் கோயிலிலிருந்து கடத்தப்பட்ட 4 ஐம்பொன் சிலைகளும் மீட்கப்பட்டுள்ளதாகவும், சாலையோரம் வீசப்பட்டிருந்த ஐம்பொன் சிலைகளும் சேதமடைந்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
ஒரு வாரத்தில் கைது: சிலை மீட்பு குறித்து ஐஜி சண்முக ராஜேஸ்வரன் செய்தியாளர்களிடம் கூறுகையில், சோழவந்தான் கோயிலிலிருந்து கடத்தப்பட்ட 4 ஐம்பொன் சிலைகளும், கணேஷ் என்பவர் அளித்த தகவலின் அடிப்படையில் திண்டுக்கல்லில் சாலையோரத்தில் மீட்கப்பட்டது.
சிலைக்கடத்தல் குற்றவாளிகளை பிடிக்க 10 தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது, குற்றவாளிகளை ஒரு வாரத்தில் கைது செய்துவிடுவோம் என ஐஜி சண்முக ராஜேஸ்வரன் தெரிவித்தார்.
ரூ.1 கோடி மதிப்பிலானவை: சோழவந்தான் கோயிலிலிருந்து கடத்தப்பட்டு மீட்கப்பட்ட ஒவ்வொரு சிலையும் தலா ரூ.1 கோடி மதிப்பிலானவை. சிலைகளை திருடியவர்கள், காவல்துறையினரின் நெருக்கடியால் திண்டுக்கல் அருகே சாலை ஓரமாக போட்டுவிட்டு தப்பிவிட்டனர் என்றார்
மேலும், சிலைகளை மீட்க உதவிய கணேசனுக்கு சன்மானம் வழங்க பரிந்துரைக்கப்படும் என பொன.மாணிக்கவேல் தெரிவித்தார்.