திருவனந்தபுரம்: ஆர்எஸ்எஸ்-ன் செயலை கேரள அரசு கை கட்டி வேடிக்கை பார்க்காது என்று கேரள அறநிலையத் துறை அமைச்சர் கடகம்பள்ளி சுரேந்திரன் தெரிவித்துள்ளார்.
பதற்றமான சூழலில், கேரளத்தில் புகழ்பெற்ற சபரிமலை ஐயப்பன் கோயிலின் நடை புதன்கிழமை மாலை திறக்கப்பட்டது. கோயிலில் அனைத்து வயது பெண்களையும் அனுமதிக்க எதிர்ப்பு தெரிவித்து பல்வேறு இடங்களில் போராட்டங்கள் நடைபெற்றன. கோயிலுக்கு வரும் வழியிலேயே பெண் பக்தர்களை போராட்டக்காரர்கள் தடுத்து நிறுத்தினர். தொடர்ந்து பதற்றம் நிலவுவதால், சபரிமலை பகுதியில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
சபரிமலை ஐயப்பன் கோயிலில் அனைத்து வயது பெண்களும் வழிபடுவதற்கு அனுமதித்து உச்ச நீதிமன்றம் கடந்த மாதம் 28-ஆம் தேதி தீர்ப்பளித்தது. அந்த தீர்ப்பை அமல்படுத்த கேரள அரசு முயன்று வரும் அதே நேரத்தில், எதிர்க்கட்சிகளான காங்கிரஸும், பாஜகவும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன.
மேலும், பல்வேறு ஹிந்து அமைப்புகளும் உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பை அமல்படுத்துவதற்கு எதிர்ப்பு தெரிவித்து கடந்த சில தினங்களாக நாடு முழுவதும் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றன.
இந்த தீர்ப்பை செயல்படுத்துவதற்கு இந்து அமைப்புகளும், ஐயப்ப பக்தர்கள் சங்கமும் கடும் எதிர்ப்புத் தெரிவித்து வருகின்றன. தமிழகம், கேரளத்தில் பல்வேறு பகுதிகளில் பேரணி மற்றும் ஆர்ப்பாட்டங்களும் நடைபெற்று வருகின்றன.
உச்சநீதிமன்றத்தின் தீர்ப்புக்கு எதிராக கேரளாவில் மீண்டும் போராட்டங்கள் நடைபெறுவதால் அங்கு தொடர்ந்து பதற்றம் ஏற்பட்டுவருகிறது.
இந்நிலையில், சபரிமலை கோயிலுக்கு வரும் பெண் பக்தர்களின் பாதுகாப்பை உறுதிசெய்வதற்கு மாநில போலீஸார் நடடிக்கை எடுக்க வேண்டும் என தேசிய மகளிர் ஆணையம் வலியுறுத்தியது.
கோயிலுக்குள் நுழைய முயன்ற பெண்களையும் வர விடாமல் போராட்டகாரர்கள் தடுத்தார்கள். அது மட்டும் அல்லாமல் சபரிமலையில் அருகே செய்தி சேகரிக்க சென்ற பத்திரிகையாளரின் காரை மறித்து போராட்டக்காரர்கள் வன்முறை தாக்குதல் நடத்தினார்கள்.
எதிர்ப்பையும் மீறி ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்த மாதவி (40) என்ற பெண் பக்தர் துணிச்சலுடன் சபரிமலை செல்வதற்கு வந்தார். பம்பை அருகே வந்தபோது, அவரை ஆண் பக்தர்கள் சுற்றி வளைத்து தடுத்து நிறுத்தினர். இதையடுத்து, அவரை போலீஸார் பத்திரமாக மீட்டுச் சென்றனர்.
இதேபோல், ஆலப்புழையைச் சேர்ந்த லிபி என்ற பெண் பக்தர், பத்தனம்திட்டா பேருந்து நிலையத்தில் போராட்டக்காரர்களால் தடுத்து நிறுத்தப்பட்டார். அவரையும் போலீஸார் பாதுகாப்புடன் அழைத்துச் சென்றனர்.
இந்நிலையில் பதற்றமான சூழலுக்கு மத்தியில் சபரிமலை கோயிலின் நடை சரியாக நேற்று மாலை 5 மணிக்கு திறக்கப்பட்டது. கோயிலுக்கு வரும் வழியிலேயே பெண் பக்தர்களை போராட்டக்காரர்கள் தடுத்து நிறுத்தினர். தொடர்ந்து பதற்றம் நிலவுவதால், சபரிமலை பகுதியில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
கேரளாவின் பல்வேறு பகுதிகளில் பாதுகாப்புக்காக போலீஸார் குவிக்கப்பட்டனர். அதேபோல் ஏராளமானபெண் போலீஸாரும் பாதுகாப்பிற்காக குவிக்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில், கேரள அறநிலையத் துறை அமைச்சர் கடகம்பள்ளி சுரேந்திரன் தாக்குதல் தொடர்பாக கருத்து தெரிவித்துள்ளார். அதில், ஐயப்ப பக்தர்களுடன் எந்தவிதமான மோதல் போக்கையும் அரசு விரும்பவில்லை. அமைதியாக இருக்கும் மாநிலத்தில், பாஜகவும், ஆர்எஸ்எஸ் அமைப்பும், அரசியல் ஆதாயத்துக்காக பதற்றத்தை ஏற்படுத்த முயலுகின்றன. ஐயப்ப பக்தர்கள் வேடத்தில் ஆர்எஸ்எஸ் அமைப்பினர் அத்துமீறலில் ஈடுபட்டுள்ளனர். அதேபோல் ஆர்எஸ்எஸ்-ன் செயலை கேரள அரசு கை கட்டி வேடிக்கை பார்க்காது என்று தெரிவித்துள்ளார்.
சபரிமலை ஐயப்ப சேவா சங்கம் சார்பில் மாநிலம் தழுவிய முழு அடைப்பு போராட்டம் நடைபெற்று வருவதால், அரசுப் பேருந்துகள் முற்றிலும் இயக்கப்படாததால் பொதுமக்கள் அவதிக்குள்ளாகி உள்ளனர்.