திருவனந்தபுரம்: தெலங்கானா தனியார் மோஜா தொலைக்காட்சியின் செய்தி வாசிப்பாளர் கவிதா மற்றும் கொச்சியை சேர்ந்த பெண்ணியவாதி ரஹானா பாத்திமாவும் சபரிமலை ஐயப்பன் கோயிலில் சுவாமி தரிசனம் செய்வதற்காக இன்று காலை சென்றனர்.
200க்கும் மேற்பட்ட போலீஸார் புடைசூழ, தலைகவசம் அணிந்து, போலீஸ் உடையில் அவர்கள் நடைபந்தல் பகுதியை அடைந்தனர். சன்னிதானத்திற்கு அருகே செல்ல முயன்ற அவர்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஏராளமான ஐயப்ப பக்தர்கள் சன்னிதானம் நுழையும் வழியில் அமர்ந்து தர்ணா செய்தனர்.
கவிதா மற்றும் போராட்டம் நடத்தும் பக்தர்களுடனும் ஐஜி ஸ்ரீஜித் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார். மேலும்,காவல்துறையினர் பிரச்சனையை ஏற்படுத்த மாட்டார்கள், பக்தர்களுடனான மோதல் எங்களுக்கு தேவையில்லை. நாங்கள் சட்டத்தை பின்பற்றுகிறோம், அரசின் முடிவுக்காக காத்திருக்கிறோம் என ஐஜி ஸ்ரீஜித் தெரிவித்தார்.
இதனிடையே, சபரிமலை கோயில் சன்னிதானத்தை நெருங்கிய இரு பெண்கள்பெண்ணை திருப்பி அனுப்ப கேரள அரசு உத்தரவிட்டுள்ளது.
இந்நிலையில், செய்தியாளர்களிடம் பேசிய கேரள அறநிலையத் துறை கடக்கம்பள்ளி சுரேந்திரன், சபரிமலை வழிபாடு நடத்துவதற்கான இடம் மட்டுமே. போராட்டம் நடத்துவதற்கான இடமல்ல. போராட்டக்காரர்கள் தங்களை நிரூபிப்பதற்கான இடமும் இதுவல்ல. போராட்ட எண்ணம் உடையவர்களை அனுமதிப்பதல்ல.
சமூக செயற்பாட்டாளர்கள் பலத்தை காட்ட வேண்டாம். பக்கதர்களின் உரிமையை பாதுகாப்பதே அரசின் நோக்கமே தவிர செயற்பாட்டாளர்களின் உரிமையை அல்ல.
செயற்பாட்டாளர்கள் தங்களது பலத்தையோ, நோக்கத்தையோ காட்ட வேண்டாம். சபரிமலை கோயிலுக்கு உண்மையான பெண் பக்தர்கள் வந்தால் அனுமதிப்போம்.
சபரிமலையில் எந்தவிதமான நோக்கத்தோடு கூடிய செயல்பாடுகளை அரசு அனுமதிக்காது. சபரிமலையை போராட்ட நோக்கத்தோடு பயன்படுத்த வேண்டாம் .சபரிமலை என்பது லட்சக்கணக்கான மக்களின் நம்பிக்கை சார்ந்த விஷயம்.
கேரள அரசின் நோக்கம் பக்தர்களின் உரிமைகளை பாதுகாப்பதே தவிர அந்த இரு பெண்களுள் ஒருவர் போராட்ட எண்ணமுடையவர். மற்றொருவர் செய்தியாளர். இது லட்சக்கணக்கான பக்தர்களின் உணர்வை பாதிக்கும் என தெரிவித்துள்ளார்.