லூதியானா: நாட்டில் விற்பனையாகும் 68.7 சதவீத பால் மற்றும் பால் பொருட்கள் தரமானது அல்ல என்று விலங்குகள் நல வாரியம் வெளியிட்ட தகவலில் தெரியவந்துள்ளது.
இதுகுறித்து இந்திய விலங்குகள் நல வாரியத்தின் உறுப்பினர் மோகன் சிங் அலுவாலியா செய்தியாளர்களிடம் கூறியதாவது:
மத்திய உணவு பாதுகாப்பு மற்றும் தரநிர்ணய ஆணையம் நிர்ணயித்துள்ள தரநிலைகளின்படி, நமது நாட்டில் பால் அல்லது பால் பொருட்கள் விற்பனை செய்யப்படுவதில்லை. நாடு முழுவதும் அன்றாடம் விற்பனையாகும் 68.7 சதவீத பால் மற்றும் பால் பொருட்களில் கலப்படமே காணப்படுகிறது. பாலில் சோப்புத்தூள், காஸ்டிக் சோடா, குளுகோஸ், வெள்ளை நிற பெயிண்ட், சுத்திகரிக்கப்பட்ட எண்ணெய் போன்றவற்றை கலப்படம் செய்கின்றனர் என்ற அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது.
மேலும் பால் அடர்த்தியாக இருப்பதற்காகவும், நீண்ட நாள் பயன்பாட்டுக்காகவும் அதில் வேண்டுமென்றே யூரியா, ஸ்டார்ச், பார்மலின் போன்றவற்றை கலக்கின்றனர். இதுபோன்ற கலப்படம் உடல் உறுப்புகளுக்கு பெரும் தீங்கை ஏற்படுத்தும் என்று அவர் கூறினார்.
நாளொன்றுக்கு 14.68 கோடி லிட்டர் என்ற அளவில் பால் உற்பத்தி செய்யப்படுகிறது. இதில், 89.2 சதவீத பால், பால் உற்பத்தி பொருட்களில் கலப்படம் செய்யப்படுவதாக கூறினார்.
பால், பால் உற்பத்தி பொருட்களில் கலப்படங்கள் செய்யும் மாநிலங்களில் தென் மாநிலங்களை விட, வட மாநிலங்களில்தான் அதிகமான கலப்படங்களும், அதிகமான பூச்சிக்கொல்லிகளின் பயன்பாட்டுடன் கூடிய கோதுமை உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது. இது "ஆபத்தான போக்கு" என்று அலுவாலியா எச்சரித்தார்.
பால் மற்றும் பால் உற்பத்தி பொருட்களில் கலப்படம் செய்வதை உடனடியாக தடுக்காவிட்டால் வரும் 2025-ஆம் ஆண்டில் 87 சதவீத மக்கள் புற்றுநோய் உள்ளிட்ட கடுமையான நோய்களால் பாதிக்கப்படுவார்கள் என்று உலக சுகாதார நிறுவனம் இந்தியாவை எச்சரித்து உள்ளது.
மனிதர்களின் அன்றாடம் பயன்படுத்தும் பால் மற்றும் பால் உற்பத்தி பொருள்களில் 68.7 சதவீதம் தரமானது அல்ல என்ற அதிர்ச்சி தகவல் மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.