புதுதில்லி: பெட்ரோல், டீசல் விலை உயர்வுக்கு அமெரிக்க டாலரின் மதிப்பு உயர்வு போன்ற சர்வதேச காரணிகளே காரணம் என்று தெரிவித்துள்ள பெட்ரோலியத்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான், விலை உயர்வை கட்டுப்படுத்துவது மத்திய அரசின் கைகளில் இல்லை என தெரிவித்துள்ளார்.
பெட்ரோல் - டீசல், சமையல் எரிவாயு உருளையின் விலை ஒருபக்கம் உச்சத்தை தொட்டுவரும் நிலையில், மறுபக்கம் ரூபாய் மதிப்பு வரலாற்றில் இதுவரை இல்லதா அளவுக்கு சரிவை சந்தித்து வருகிறது.
இந்நிலையில், பெட்ரோல், டீசல் விலை உயர்வை கட்டுப்படுத்துவது மத்திய அரசின் கைகளில் இல்லை என மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் செய்தியாளர்கள் சந்திப்பில் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில், அமெரிக்க டாலருக்கு எதிராக இந்திய ரூபாயின் மதிப்பு குறைவதே எரிபொருளின் விலை உயர்வுக்கு முக்கிய காரணம். கச்சா எண்ணெயை டாலர் மூலமாகவே வாங்க வேண்டியிருப்பதே நமக்கு பிரச்னையை உருவாக்கி உள்ளது. .
கச்சா எண்ணெய் ஏற்றுமதி செய்யும் நாடுகளின் கூட்டமைப்பான "ஒபெக்", ஜூலை ஒன்றாம் தேதி முதல் நாளொன்றுக்கு 10 லட்சம் மெட்ரிக் டன் கச்சா எண்ணெய் உற்பத்தி செய்வதாக உறுதி அளித்தது. ஆனால், ஜூலை - ஆகஸ்ட் மாத புள்ளிவிவரங்களின் படி, அந்த இலக்கு எட்டப்படவில்லை.
மேலும், ஈரான் விவகாரம், வெனிசுலா மற்றும் துருக்கியில் நிலவும் நிதி நெருக்கடி போன்ற சர்வதேச காரணிகளும் கச்சா எண்ணெய் உற்பத்தியில் கடும் தாக்கத்தை ஏற்படுத்தி உள்ளது. இவைகளை எல்லாம் சரி செய்வது இந்தியாவின் கைகளில் இல்லை என்பதால், பெட்ரோல் டீசல் விலை உயர்ந்து வருகிறது என்றார்.
மேலும், பெட்ரோல், டீசல் ஆகியவற்றை ஜிஎஸ்டிக்குள் கொண்டு வருவது சரியாக இருக்கும். ஆனால், மாநிலங்கள் ஒத்துழைக்கவில்லை. எப்போதும் கச்சா எண்ணெய் விலை உயர்வதால் பெட்ரோல், டீசல் விலை உயர்கிறது என்பார்கள், ஆனால் இம்முறை அது டாலருக்கு மாறியிருக்கிறது என பிரதான் கூறினார்.