புதுதில்லி: புதுதில்லியில் கழிவுநீர் தொட்டியை சுத்தம் செய்யும் போது விஷவாயு தாக்கியதில் 5 பேர் உயிரிழந்தனர்.
தில்லி மோதி நகர் பகுதியிலிருக்கும் டி.எல்.எஃப் அடுக்குமாடி குடியிருப்பில் 22 முதல் 30 வயதிற்குட்பட்ட 5 துப்புரவு தொழிலாளர்கள் கழிவுநீர் தொட்டியை சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட்டு கொண்டிருந்தனர். அப்போது திடீரென விஷவாயு தாக்கியதில் 2 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மூச்சுத்திணறலால் பாதிக்கப்பட்ட மற்ற 3 பேரும் தில்லியிலுள்ள தீன் தயாள் உபத்யாய் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இந்நிலையில் அவர்கள் 3 பேரும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர்.
இதனிடையே நச்சு வாயு தாக்கி 5 பேர் உயிரிழந்தது குறித்து கரோல் பாக் மாவட்ட பாஜக தலைவர் பாரத் பூஷன் மாதன் கூறுகையில், தில்லியில் இது போன்ற சம்பவம் நடைபெறுவது இது முதல் முறையல்ல. ஆம் ஆத்மி அரசுதான் இச்சம்பவத்திற்கு பொறுப்பேற்க வேண்டும். கழிவுநீர் தொட்டிகளை சுத்தம் செய்வதற்கு புதிய தொழில்நுட்பங்களை அறிமுகபடுத்துவோம் என உறுதியளித்த இந்த அரசு, பல உயிரிழப்புகளுக்கு பின்னரும் பழைய நுட்பங்களையே உபயோகப்படுத்துகிறது என குற்றம்சாட்டினார்.
அந்த பகுதியைச் சேர்ந்த 99-வது வார்டு கவுன்சிலர் சுனிதா மிஸ்ரா, உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ. 50 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும் என கோரினார்.