புதுதில்லி: வரும் 2019 மக்களவை பொதுத் தேர்தலில் எந்தவொரு கட்சியையும் ஆதரிக்க போவதில்லை என தேர்தல் வியூக வித்தகர் பிரசாந்த் கிஷோர் தெரிவித்துள்ளார்.
தேர்தல் வெற்றி வியூக வித்தகர் பிரசாந்த் கிஷோர், கடந்த 2012-ஆம் ஆண்டு நடைபெற்ற குஜராத் பேரவைத் தேர்தல் மற்றும் 2014 மக்களவைத் தேர்தலிலும், பாஜகவிற்கு ஆதரவாக நரேந்திர மோடியுடன் பணியாற்றியவர். இவர் வகுத்து தந்த தேர்தல் வெற்றி வியூக திட்டத்தின்படி செயல்பட்ட பாஜக குஜராத் பேரவைத் தேர்தல் மற்றும் மக்களவைத் தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சியை கைப்பற்றியது.
அதனைத் தொடர்ந்து உத்தரபிரதேசத்திலும் பெரும்பாலான இடங்களில் பாஜக வெற்றி பெற்றதை அடுத்து பிரசாந்த் கிஷோர் அரசியல் கட்சியினரிடையே புகழ் பெற்றார்.
இதையடுத்து ஒவ்வொரு மாநில கட்சிகளும் தங்களின் மாநிலங்களுக்கு வந்து தங்களின் வெற்றிக்கு பிரசாரதிற்காக வரும்படி அழைப்பு விடுத்தனர். அவற்றில் சில அழைப்புகளை ஏற்ற பிரசாந்த் கிஷோ, ஒரு சில மாநிலங்களுக்கு சென்று அம்மாநில கட்சிகள் ஆட்சியை கைப்பற்றும் விதமாக தேர்தல் வியூகம் வகுத்து தந்துள்ளார்.
வரும் 2019-இல் மக்களவைத் தேர்தலுடன், ம.பி., ராஜஸ்தான், சத்தீஸ்கர், தெலங்கானா மாநிலங்களுக்கும் பேரவைத் தேர்தல் நடைபெற உள்ளது.
இந்நிலையில், இந்திய ஸ்கூல் ஆஃப் பிசினஸ் லீடர்ஷிப் உச்சிமாநாட்டில் பிரசாந்த் கிஷோர் கலந்துகொண்டு பேசுகையில், வரும் 2019 மக்களவைத் தேர்தல் மற்றும் சட்டப்பேரவை தேர்தலில் எந்தவொரு கட்சியையும் ஆதரிக்க போவதில்லை என்றும் 2019 தேர்தல் பிரசாரத்திற்கான ஒரு கருவியாக நான் இருக்க மாட்டேன் என்று கூறியுள்ளார்.